முன்னாள் தேசிய கால்பந்து வீரர், தன்முனைப்பு பேச்சாளரை JPJ கைது செய்தது 

26 மே 2026, 6:20 AM
முன்னாள் தேசிய கால்பந்து வீரர், தன்முனைப்பு பேச்சாளரை JPJ கைது செய்தது 

ஷா ஆலாம், மே 26: சாலைப் போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டதற்காக, சாலைப் போக்கு வரத்துத் துறை (JPJ) மேற்கொண்ட 'ஆப்ஸ் லக்சரி' (Ops Luxury) நடவடிக்கையின் போது 'டத்தோ' பட்டம் கொண்ட தொழில் முனைவோர் தன்முனைப்பு பேச்சாளராகவும் மற்றும் முன்னாள் தேசிய கால்பந்து வீரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூப்பர் லீக் (Liga Super) போட்டிகளில் பல முறை சாம்பியன் பட்டம் வென்ற அந்த முன்னாள் கால்பந்து வீரர், நேற்று அதிகாலை 4 மணியளவில் புக்கிட் பிந்தாங் பகுதியில் தொயோத்தா வெல்ஃபயர் (Toyota Vellfire) ரக வாகனத்தை ஓட்டிச் சென்ற போது கைது செய்யப் பட்டார்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஊக்கமளிக்கும் பேச்சாளர், மோட்டார் வாகன உரிமம் (LKM) காலாவதியான நிலையிலும், காப்புறுதி (Insurance) இல்லாமலும் மெர்சிடிஸ் பென்ஸ் பிராபஸ் ஏஎம்ஜி (Mercedes Benz Brabus AMG) காரை ஓட்டியதற்காக கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் தடுத்து நிறுத்தப் பட்டார்.

முன்னாள் கால்பந்து வீரரின் வாகனம் மூன்று குற்றங்களுக்காகப் பறிமுதல் செய்யப் பட்டதாக, ஜேபிஜே-இன் (திட்டமிடல் மற்றும் நடவடிக்கை) துணைத் தலைமை இயக்குநர் டத்தோ ஜஸ்மானி ஷஃபாவி தெரிவித்தார்.

காப்புறுதி இல்லாதது, மோட்டார் வாகன உரிமம் (ரோட்டேக்ஸ்) மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை காலாவதியானது ஆகியவையே அக்குற்றங்களாகும் என அவர் விவரித்தார்.

"கடந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி முதலே அந்த வாகனத்தின் ரோட்டேக்ஸ் காலாவதியாகி விட்டது. அதை புதுப்பிக்காமல் ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. அதனால்தான் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது," என்று நேற்றிரவு கோலாலம்பூர் ஜேபிஜே டிப்போவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார் என பெரீத்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஊக்கமளிக்கும் பேச்சாளரின் வாகனத்தைப் பொறுத்தவரை, ஒரு மாதமாக மோட்டார் வாகன உரிமம் காலாவதியானதாலும், காப்புறுதி இல்லாததாலும் அது பறிமுதல் செய்யப் பட்டதாக அவர் கூறினார்.

"காப்புறுதி இல்லாமல் வாகனத்தைச் செலுத்துவது ஓட்டுநருக்கு மட்டுமின்றி மற்ற சாலைப் பயணிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும்," என்று அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

வாகனப் பதிவு எண்ணை மாற்றிய பிறகும் பழைய பதிவு எண்ணையே அந்த வாகனத்தில் பொருத்தியிருந்ததையும் ஜேபிஜே கண்டறிந்தது. இதுவும் சாலை விதிகளின் கீழ் ஒரு குற்றமாகும் என்று ஜஸ்மானி குறிப்பிட்டார்.

"வாகனம் தடுத்து நிறுத்தப்பட்ட போது, வேறு பதிவு எண் பொருத்தப் பட்டிருந்தது. அவர் தனது வாகனப் பதிவு எண்ணை மாற்றியிருந்தாலும், தொடர்ந்து பழைய எண்ணையே பயன்படுத்தி வந்துள்ளார்," என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்ட குற்றங்களில், ஒரு வாகனத்தின் உரிமம் ஜனவரி 1, 2025 முதலே காலாவதியாகி இருந்ததும் நீண்டகால குற்றமாகப் பதிவாகியுள்ளது. மேலும், வாகன உரிமத்தைப் புதுப்பிக்கத் தவறிய மிகவும் விலைமதிப்பற்ற வாகனம் போர்ஷே (Porsche) ஆகும். அதற்கான கட்டணம் RM16,000-ஐ எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.