மாச்சாங்,ஜூலை 2 - வழிகாட்டும் வரைபட செயலியை நம்பி காரை 7 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கிற்குள் விட்டனர் சீன நாட்டு பயணிகள்.
கிளந்தான் மாச்சாங்கில், ஜாலான் கோத்தா பாரு-குவாலா கிராய் சாலையின் 41- வது கிலோமீட்டரில் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்டிருந்த பகுதிக்குள் அவர்கள் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து, அவ்வாகனத்தில் இருந்த அனைவரும் காயமடைந்தனர்.
அந்த விபத்து தொடர்பில்,நள்ளிரவு மணி 12.01க்கு பொது மக்களிடமிருந்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அசுஹார் மொஹமட் நோர் தெரிவித்தார்.
இரவு மணி 11.50 வாக்கில் தொயொத்தா பிரியஸ் காரை செலுத்தியிருந்த 66 வயதான சீன நாட்டு ஆடவர் மேலும் நான்கு சீன நாட்டுப் பயணிகளோடு, மாச்சாங் தெமாஙானில் (Temangan) இருந்து பாசீர் புத்தே-தொக் பாலி (Pasir Puteh-Tok Bali) நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் காயமடைந்த 40 வயதிலிருந்து 66 வயதுக்கு உட்பட்ட 3 ஆடவர்களும் இரு பெண்களும் மாச்சாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை அடுத்து, ஓட்டுநர்கள், கட்டுமானப் பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை, பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருக்கும் கூம்பு, தடுப்புகள் போன்றவற்றை நன்கு கவனிக்குமாறு அசுஹார் அறிவுறுத்தினார்.







