லண்டன், ஜூன் 30: உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், இனி பயனர்கள் தங்களின் தொலைபேசி எண்களைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல், தனித்துவமான 'பயனர் பெயர்' (Usernames) மூலமாக மட்டுமே உரையாடுவதற்கான புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
அடுத்த சில மாதங்களுக்குள் இந்த அம்சம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, பயனர்கள் தங்களுக்குத் தேவையான பெயர்களைப் பதிவு செய்து கொள்வதற்கான (Reserve) வசதி நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த பயனர் பெயரை உருவாக்குவது கட்டாயமாக்கப்படவில்லை, பயனர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப இப்பெயர்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளவோ அல்லது நீக்கிக் கொள்ளவோ முடியும் என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த அம்சம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்தவுடன், புதிய நபர்களுடன் இணைவதற்குத் தொலைபேசி எண்களைப் பகிர்வதற்குப் பதிலாக, பயனர் பெயர்களை மட்டுமே பரிமாறிக் கொண்டால் போதுமானதாகும்.
அதிகபட்சமாக 35 எழுத்துகளைக் கொண்டு உருவாக்கப்படவுள்ள இப்பெயர்களில், முக்கிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற பிரபலங்களின் பெயர்களைப் பிறர் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.







