ஷா அலாம், ஜூன் 27 - இன்று அதிகாலையில் டுத்தா-உலு கிளாங் (DUKE) நெடுஞ்சாலையின் ஜாலான் கூச்சிங் வெளியேறும் சரிவுப் பாதையில்( exit ) கார் சறுக்கி மோதி தீப்பிடித்ததில் இருவர் உயிரிழந்தனர்.
காரில் இருந்த அந்த இருவரும் தீயில் கருகி உயிரிழந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மீட்பு துறை அறிக்கையில் தெரிவித்தது.
அதிகாலை மணி 5.20க்கு அவசர அழைப்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ஜின்ஞாங், ஶ்ரீ ஹர்தாமாஸ் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்தை சென்றடைந்தபோது தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்த வாகனத்தில் மூவர் இருந்ததைக் கண்டனர்.
வாகனத்திற்குள் சிக்கிக் கொண்ட இருவர் தீயில் கருகிய வேளையில் மூன்றாவது நபர் காப்பாற்றப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.
இவ்விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக தீயணைப்பு துறை அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.







