ஷா ஆலம், ஜூன் 22 - பொருளாதார மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பப் புரட்சிகளால் வேலைகளை இழந்து தவிக்கும் மேலாளர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்களுக்கும் 'திவேட்' (TVET) எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சித் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தியுள்ளார்.
தொழிலாளர் மேம்பாட்டு முன்முயற்சிகள் என்பவை குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்கக் கூடாது; மாறிவரும் தொழில்துறை தேவைகளால் பாதிக்கப்பட்டுள்ள அனுபவம் வாய்ந்த உயர் அதிகாரிகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
டிஜிட்டல் மயமாக்கல் மூலமான உருமாற்றம் என்பது வெறும் சாதாரண வேலைகளை மட்டுமே பாதிக்கவில்லை, மாறாக அது தொழில்முறை நிபுணர்கள் மற்றும் மேலாண்மை மட்டத்திலான ஊழியர்களையும் சேர்த்தே பாதித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
எனவே, சிலாங்கூர் மாநில அரசு வேலை இழந்த தொழிலாளர்களின் துல்லியமான தரவுகளைச் சேகரித்து, அந்தத் தரவுகளின் அடிப்படையில் அவர்களை மாநிலத்தில் புதிதாக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளுடன் இணைக்கும் ஒரு முறையான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அதே வேளையில், தகுதி வாய்ந்த மக்களுக்கு அரசு அறிவிக்கும் உதவிகள் மிக விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், தேவையற்ற முறைகளைக் குறைத்து, விநியோகச் செயல்முறைகளை மேலும் திறம்பட மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இரண்டு கட்டங்களாக மொத்தம் 355.06 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டைக் கொண்டுள்ள சிலாங்கூரின் பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தும் திட்டம், உலகளாவிய பொருளாதார ஸ்திரமற்ற தன்மை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகளுக்கு மத்தியில் மக்களைப் பாதுகாப்பதில் மாநில அரசு கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று பிரகாஷ் பாராட்டினார்.
இத்தகைய கொள்கை உருவாக்கமானது, உலக வங்கி மற்றும் 'ஓஇசிடி' (OECD) போன்ற சர்வதேச அமைப்புகளால் பரிந்துரைக்கப்படும் ஒரு சிறந்த உலகளாவிய நடைமுறையாகும். இதன் மூலம் அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரிங்கிட்டும் மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளைத் தரும் என்றும் பிரகாஷ் விவரித்தார்.







