பெட்டாலிங் ஜெயா, ஜூன் 21: ஜொகூர், பத்து பஹாட் கடலோரப் பகுதியில் இன்று அதிகாலை 3.3 ரிக்டர் அளவில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டது.
மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று அதிகாலை 1.17 மணியளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகத் தெரிவித்தது.
பத்து பஹாட் தென்மேற்கின் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலைநடுக்கம் மையமிட்டிருந்தது.
அந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பத்து பஹாட் , அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த மெட் மலேசியா, நிலைமையைச் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறியது.
பத்து பஹாட் மாவட்டத்தில் பதிவாகிய ஆறாவது நில அதிர்வு இதுவாகும். இதற்கு முன் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ரிக்டர் அளவில் 3.1 ஆகவும், மார்ச் 14-ஆம் தேதி ரிக்டர் அளவில் 3.2 ஆகவும் நில அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.







