காஜாங்,ஜூன் 20 - சிலாங்கூர், செமிஞே-வில் (Semenyih) காணாமல் போன பணப் பையிலிருந்து 10,000 ரிங்கிட்டைத் திருடியதற்காக 37 வயது பொருள் விநியோக ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
அத்திருட்டு தொடர்பில் புதன்கிழமை இரவு புகார் பெற்றதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைமை உதவி ஆணையர் நஸ்ரூன் அப்துல் யூசோப் (Naazron Abdul Yusof )தெரிவித்தார்.
அதையடுத்து வியாழக்கிழமை அதிகாலை மணி ஒன்றுக்கு அந்த ஓட்டுநரைப் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, காணாமல் போன அப்பணப்பையை அந்த ஓட்டுநர், அப்பணப் பைக்குச் சொந்தமான சீன நாட்டுப் பெண்ணிடம் ஒப்படைத்திருக்கிறார். அப்போது அப்பணப்பையில் இருந்த 10,000 ரிங்கிட் ரொக்கம் காணாமல் போயிருப்பதாகவும், அதனை அந்த ஓட்டுநர் தான் திருடியிருப்பதாக அந்தப் பெண் சண்டையிட்டிருக்கிறார்.
அதன் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது. அக்காணொளியில் அந்த ஓட்டுநர் தான் அப்பணத்தை எடுக்கவில்லை என மறுத்திருக்கின்றார்.
இவ்வேளையில் கைது செய்யப்பட்ட அந்த ஓட்டுநர் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.







