இஸ்தான்புல், ஜூன் 20 — 2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் போது தங்கள் நாட்டுத் தேசிய அணிக்கு அமெரிக்க அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ள கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் குறித்து, உலகக் காற்பந்துச் சம்மேளனமான FIFA-விடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கவுள்ளதாக ஈரான் காற்பந்துச் சம்மேளனம் (FFIRI) தெரிவித்திருக்கிறது.
விசா விதிமுறைகளின்படி, போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்புதான் ஈரான் வீரர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் ; போட்டி முடிந்த அன்றே அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தகைய கட்டுப்பாடுகள் மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் தங்களுக்கு சரிமமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என ஈரான் வாதிட்டது.
பெல்ஜியத்திற்கு எதிரான G குழு நிலையிலான போட்டியில் பங்கேற்க இரண்டு நாட்களுக்கு முன்பே செல்ல ஈரான் அனுமதி கோரியிருந்த நிலையில் இந்த விசா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி (2-2) முடிந்தவுடன் இரவு தங்குவதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டு, ஈரான் அணி உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறி மெக்சிகோவில் உள்ள தங்களின் பயிற்சித் தளத்திற்கு திரும்ப வேண்டியிருந்தது.
இத்தகைய நெருக்கடிகள் வீரர்களின் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கும் என்று ஈரான் சம்மேளனம் கவலை தெரிவித்தது.







