புதுடெல்லி, ஜூன் 17 - இந்தியாவில் நீட் மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அந்தத் தேர்வு முடியும் வரையில் ‘டெலிகிராம்’ செயலிக்கு அந்நாட்டு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்திருக்கின்றது.
இந்தியாவில் ஆண்டுதோறும் மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் (இளங்கலை மாணவர்) நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
அந்த வகையில், நடப்புக் கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெற்ற வேளையில், வினாத்தாள் கசிந்ததால் குறிப்பாக டெலிகிராம் செயலியின் மூலமாக முன்கூட்டியே தேர்வு வினாக்கள் வெளயேறிதால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து நீட் மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்த அரசின் முடிவை அதன் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் குறை கூறியிருக்கின்றார்.
அந்த நடவடிக்கையின் மூலம், தேர்வுக்கான தகவல்களை கசிய விட்ட தேர்வு நடத்தும் முகமையில் உள்ள நபர்களுக்கு பதிலாக, இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் கூடுதலான டெலிகிராம் பயனாளர்கள் தண்டிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்த தடையால், டெலிகிராம் தவிர்த்த பிற செயலிகள் மூலம் வினாத்தாள் கசிவுகள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக அவர் தனது காட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவ்வேளையில், இந்தியாவில் நீட் மறுதேர்வு நடைபெறும் 18 மண்டலங்களைச் சேர்ந்த மையங்களுக்கான வினாத்தாள்களைக் கொண்டு செல்ல இந்திய விமான படையின் உதவியுடன் மத்திய அரசு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.







