முதியோர்களுக்கான நடவடிக்கைகளுக்கு சிலாங்கூர் அரசு 50,000 ரிங்கிட் ஒதுக்கீடு

7 ஜூன் 2026, 3:26 AM
முதியோர்களுக்கான நடவடிக்கைகளுக்கு சிலாங்கூர் அரசு 50,000 ரிங்கிட் ஒதுக்கீடு

சுபாங் ஜெயா, ஜூன் 7: 2026-ஆம் ஆண்டுக்கான முதியோர் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான மானியத்தின் (GAPS) வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மாநில அரசு மொத்தம் ரிம50,000 நிதியை ஒதுக்கியுள்ளது.

முதியோர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 10 அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு (NGO) இந்த மானியம் பெரும் பயனளிக்கும் என்று மகளிர் மேம்பாட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.

"மாநில அரசின் ஒருங்கிணைப்பு நிறுவனமான சமூகநலத் துறையின் (JKM) வாயிலாக முதியோர் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான இந்த மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசு ரிம50,000 நிதியை ஒதுக்கியுள்ளது.

"இந்த மானியத் திட்டத்தின் கீழ் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. அந்த விண்ணப்பங்கள் மற்றும் அவற்றின் பொருத்தத்தின் அடிப்படையில் நாங்கள் 10 நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்துள்ளோம். 2027-ஆம் ஆண்டில் இதன் வடிவம் மாறுபடலாம். எனவே, இதனை நாங்கள் அவ்வப்போது கண்காணித்து வருவோம்.

"அரசுக்கும் அதன் நிறுவனங்களுக்கும் இடையேயான உறவு மட்டுமின்றி, மாநில அரசுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் (PBT) இடையிலான உறவும், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனியார் துறைகளுடனான இந்த நெருக்கமான மற்றும் வியூக ரீதியிலான ஒத்துழைப்பு முக்கியமானது," என்று அவர் 2026 சிலாங்கூர் நெகிழ்வுத்திறன் மிக்க மகளிர் (Jelajah Wanita Berdaya Tahan Selangor) பிரச்சாரப் பயணத்தை தொடக்கி வைத்த பின்னர் கூறினார்.

மாநில அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இந்த மானியம் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய, செயல்படுத்தப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அல்லது நடவடிக்கையும் சிலாங்கூர் சமூகநலத் துறையால் (JKM) கண்காணிக்கப்படும் என்றும் அன்ஃபால் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே, முதியோர்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், பொருத்தமான விளையாட்டு நடவடிக்கைகளை நடத்துவதற்கு வழங்கப்பட்ட இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளப்போவதாக ‘கெலாப் டெடிகாசி பந்தாஸ்’ (Kelab Dedikasi Pantas) மன்றத்தின் தலைவர் சூரி மர்யானா மாமாட் கூறினார்.

“இறைவனுக்கு நன்றி, மன்றம் தொடங்கப்பட்டு ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாகிவிட்ட நிலையில், மாநில அரசிடமிருந்து நிதியோ அல்லது மானியமோ பெறுவது இதுவே முதல் முறையாகும்.

"இந்த மானியம் முதியோர்களை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும். அதாவது முதியோர்களிடையே விளையாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். எங்களிடம் சுமார் 180 முதியோர்கள் உள்ளனர்,” என்று அவர் விவரித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.