போலீசாரிடமிருந்து தப்பியோடிய நான்கு ஆடவர்கள் கைது

29 மே 2026, 8:04 AM
போலீசாரிடமிருந்து தப்பியோடிய நான்கு ஆடவர்கள் கைது

கோலாலம்பூர், மே 29: இன்று காலை கோத்தா டாமன்சாராவிலிருந்து ஆயர் பனாஸ் வரை ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி, போலீஸ் ரோந்து காரிடமிருந்து தப்பியோடிய நான்கு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகாலை 2.23 மணியளவில் கறுப்பு நிற ஹோண்டா ஒடிஸி (Honda Odyssey) ரக எம்.பி.வி (MPV) வாகனத்தை போலீஸ் ரோந்துப் படையினர் சோதனையிட முயன்றபோது இச்சம்பவம் தொடங்கியதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சம்சுடின் மாமாட் தெரிவித்தார்.

கோத்தா டாமன்சாரா, பெர்சியாரான் இண்டஸ்ட்ரியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அருகே சந்தேகத்திற்குரிய வகையில் அந்த வாகனம் நின்றிருந்ததை போலீசார் கவனித்தனர்.

"இருப்பினும், வாகனத்தை நிறுத்தும்படி உத்தரவிடப் பட்டும், சந்தேக நபர்கள் அதற்கு மறுத்து, வாகனத்தை அதிவேகமாக நகர மையத்தை நோக்கிச் செலுத்தினர்.

"துரிதமாக செயல்பட்ட போலீசார் கோலாலம்பூர், ஆயர் பனாஸ், ஜாலான் ஆயர் ஜெர்னியில் அந்த வாகனத்தை மறித்து நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த வாகனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், திருட்டு மற்றும் வீடுகளை உடைத்துக் கொள்ளையடிக்கப் பயன்படுத்தப் படும் பல்வேறு உபகரணங்கள் கண்டுபிடிக்கப் பட்டதாக சம்சுடின் கூறினார்.

அவற்றுள் பாராங் கத்தி, உளி, இரும்பு வெட்டும் கருவி, கடப்பாரை (kuku kambing), திருப்பு உளி (screwdriver) மற்றும் ரேட்செட் (ratchet) கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

30 வயதுகளில் உள்ள அந்த நான்கு சந்தேக நபர்களின் பின்னணியைப் பரிசோதித்ததில், பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் அவர்களுக்கு 15 முதல் 19 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களில் மூவர் போலீசாரால் தேடப்பட்டு வரும் நபர்கள் ஆவர்.

அனைத்து சந்தேக நபர்களும் நாளை வரை இரண்டு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசு ஊழியர் ஒருவரை அவரது கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 186-இன் கீழும், 1958-ஆம் ஆண்டின் அரிக்கும், வெடிக்கும் பொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டம் பிரிவு 6(1)-இன் கீழும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.