உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சக அதிகாரிகள் 790 போலி கைக் கடிகாரங்களை பறிமுதல் செய்து, ஆடவரை கைது செய்தனர்

18 மார்ச் 2026, 3:35 AM
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சக அதிகாரிகள் 790 போலி கைக் கடிகாரங்களை பறிமுதல் செய்து, ஆடவரை கைது செய்தனர்

ஷா ஆலாம்: உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம் (KPDN), கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் உள்ள ஒரு வளாகத்தில் நடத்திய சோதனையில் RM790,600 மதிப்புள்ள, பல்வேறு பிரபலமான முத்திரைகளைக் கொண்ட 790 போலி கைக் கடிகாரங்களைப் பறிமுதல் செய்ததுடன், ஆடவர் ஒருவரையும் கைது செய்துள்ளது.

சுமார் ஒரு மாத கால கண் காணிப்புக்குப் பிறகு இந்தச் சோதனை மேற்கொள்ளப் பட்டதாக அமைச்சின் அமலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் தெரிவித்தார். இந்த வளாகம் போலி கைக் கடிகாரங்களைச் சேமித்து வைப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் ஒரு மையமாகப் பயன்படுத்தப் பட்டதாக நம்பப்படுகிறது.

“கைக்கடிகாரங்களைத் தவிர, சேமிப்பிற்கும் விற்பனைக்கும் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் முத்திரையிடப்பட்ட பெட்டிகள், காகிதப் பைகள் மற்றும் பிற பொருட்களையும் எங்கள் குழுவினர் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், இந்த நடவடிக்கையை 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் ஒருவர் நிர்வகித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சந்தேக நபர், அந்த இரண்டு மாடி வளாகத்தில் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இருப்பு மற்றும் விற்பனை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்ததாக நம்பப்படுகிறது.

"உண்மையான நடவடிக்கைகளை மறைக்கும் நோக்கில், கீழ்த்தளம் கைக்கடிகாரங்கள் பழுதுபார்க்கும் பட்டறையாகவும், மேல்தளம் சேமிப்பு மற்றும் விற்பனை இடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது."

"வளாகம் உள்ளிருந்து மட்டுமே திறக்கக்கூடிய பூட்டப்பட்ட கதவுகளுடன் இறுக்கமாகக் கண்காணிக்கப் பட்டதுடன், கண்காணிப்புக் கேமராக்களும் (CCTV) பொருத்தப்பட்டிருந்தன," என்று அவர் மேலும் கூறினார்.

அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப் பட்டதாகவும், போலி கைக்கடிகாரங்கள் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இந்த வழக்கு, வர்த்தக முத்திரைச் சட்டம் 2019 (சட்டம் 815) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

"போலிப் பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபடும் எந்தத் தரப்பினருடனும் KPDN சமரசம் செய்து கொள்ளாது. ஏனெனில் இது சட்டவிரோதமானது மற்றும் நுகர்வோரையும் உண்மையான வர்த்தக முத்திரை உரிமையாளர்களையும் பாதிக்கிறது," என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

இது போன்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் 019-848 8000 என்ற வாட்ஸ்அப் எண், KPDN e-aduan இணையதளம், 1-800-886-800 என்ற ஹாட்லைன் அல்லது Ez Adu KPDN செயலி மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.