ஷா ஆலம், மே 29 - சிலாங்கூர் மக்களின் வாழ்வாதாரத் திறனை வலுப்படுத்தும் திட்டத்தின் (Pakej Pengukuhan Daya Tahan Selangor) கீழ், பொதுப் போக்குவரத்துப் பயணக் கட்டண மானியத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவுள்ளன.
இந்தச் சிறப்புத் திட்டம் முதற்கட்டமாக விண்ணப்பிக்கும் 50,000 தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகச் சிலாங்கூர் மாநில அரசுச் செயலகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் நிலவி வரும் வாழ்வாதாரச் செலவின உயர்வின் தாக்கத்தைக் குறைத்து, மக்களின் பொதுப் போக்குவரத்துச் செலவினங்களை ஓரளவுக்குத் தணிக்கும் நோக்கில் இந்தச் சிறப்பு மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறும் சிலாங்கூர் மாநில மக்கள், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஒப்புதல்களுக்கு உட்பட்டு, ஆறு மாதக் காலத்திற்கு மாதந்தோறும் 30 ரிங்கிட் பயணக் கட்டண மானியத்தைப் பெறுவார்கள் என்று மாநில அரசுச் செயலகம் தனது முகநூல் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்த மானியத் திட்டத்திற்கு மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் இதற்கான ஆயத்தப் பணிகளை முன்கூட்டியே செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, பயனீட்டாளர்கள் தங்களின் கைப்பேசியில் 'நைன்' (NINE) செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் தங்களின் சுயவிவர அங்கீகார (eKYC) செயல்முறையை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் புவிசார் அரசியல் நெருக்கடியின் பொருளாதாரத் தாக்கங்களை எதிர்கொள்வதற்காக, சிலாங்கூர் மாநில அரசாங்கம் 131 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் இந்த வாழ்வாதாரத் திறனை வலுப்படுத்தும் சிறப்புத் திட்டத்தை முன்னதாக அறிமுகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.








