கோலாலம்பூர், மே 26 - சிலாங்கூர், காஜாங்கில் உள்ள பண்டார் ஸ்ரீ புத்ரா, ஜாலான் பெர்சியாரான் ஸ்ரீ புத்ரா 2 பகுதியில் நேற்றிரவு புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கும் (JSJ) குற்றவாளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு உள்ளூர் குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூடு இரவு 9.10 மணியளவில் நிகழ்ந்ததாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நிகழ்ந்த பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் இவ்விரு சந்தேக நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
"சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு ரிவால்வர் வகை கைத்துப்பாக்கி, சில தோட்டாக்கள் மற்றும் தோட்டாக்களின் வெற்று உறைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
மேலும், நான்கு வெட்டுக்கத்திகள், வீட்டை உடைக்கப் பயன்படுத்தும் உபகரணங்கள், முகமூடிகள் மற்றும் கையுறைகளும் அங்கிருந்து மீட்கப்பட்டன," என்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வச் செய்தியாளர் சந்திப்பு நாளை நடைபெறும் என்றும் குமார் மேலும் தெரிவித்தார்.
- பெர்னாமா







