ஓராங் அஸ்லி கிராமங்களின் நிலப்பிரச்சனை குறித்து சிறப்பு கூட்டத்தில் விவாதம்

22 மே 2026, 7:49 AM
ஓராங் அஸ்லி கிராமங்களின் நிலப்பிரச்சனை குறித்து சிறப்பு கூட்டத்தில் விவாதம்

ஷா ஆலம், மே 22: கிள்ளான் மாவட்டத்தில் உள்ள சில ஓராங் அஸ்லி கிராமங்களின் நிலங்களை அரசிதழில் வெளியிடும் (Pewartaan) பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், மாநில அரசாங்கம் தொடர்ந்து இந்த நில விவகாரத்தில் கவனம் செலுத்தி வருகிறது.

மனித வள மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறுகையில், நேற்று மாவட்ட நடவடிக்கை அறையில் தமது தலைமையில் நடைபெற்ற கிள்ளான் மாவட்ட ஓராங் அஸ்லி நில அரசிதழ் வெளியீட்டு கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், மாவட்டத்தில் இன்னும் இரண்டு ஓராங் அஸ்லி கிராமங்கள் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை; அவை பூலாவ் இண்டா ஓராங் அஸ்லி கிராமம் மற்றும் பூலாவ் கெத்தாம் ஓராங் அஸ்லி கிராமம் ஆகியவையாகும் என்றார்.

"பூலாவ் இண்டா ஓராங் அஸ்லி கிராமத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 72 குடியிருப்பாளர்கள் உள்ளனர். அரசிதழில் வெளியிடும் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு முன்னதாக, அங்கு நில அளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது."

"அதே வேளையில், பூலாவ் கெத்தாம் ஓராங் அஸ்லி கிராமத்தில் சுமார் 20 குடும்பங்களும் 70 குடியிருப்பாளர்களும் உள்ளனர். இக்கிராம நிலத்தை அரசிதழில் வெளியிடும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன," என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், பாகான் ஹைலாம் ஓராங் அஸ்லி கிராமம் ஏற்கனவே அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது என்றாலும், அடிக்கடி ஏற்படும் கடல் அலை ஏற்றம், நதிக்கரை அரிப்பு மற்றும் சேறு நிறைந்த நில நிலைமைகளால் அப்பகுதியில் தற்போது மக்கள் வசிக்கவில்லை என்பது தமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அப்பகுதியில் உள்ள சமூகத்தினருக்குச் சொந்தமாக இடுகாடு இல்லை என்றும், இறுதிச் சடங்குகளுக்காக சடலங்களைப் பூலாவ் கேரிக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பாப்பாராய்டு சுட்டிக்காட்டினார்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து மேல் நடவடிக்கை எடுப்பதற்காகப், புக்கிட் கெமுனிங் ஓராங் அஸ்லி நில விண்ணப்பம் தொடர்பான பிரச்சனையையும் தாம் இக்கூட்டத்தில் எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"ஓராங் அஸ்லி மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதையும், உறுதி செய்யப்படுவதையும் கருத்தில் கொண்டு, அவர்களின் கிராம நிலங்களை அரசிதழில் வெளியிடுவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்படும் என நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.