ஷா ஆலம், மே 7: கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி ஷா ஆலம், செக்சன் 24-இல் வீசிய கடும் புயலால் பாதிக்கப்பட்ட 17 வீடுகளுக்கான கூரைச் சீரமைப்புப் பணிகள், 259,740 ரிங்கிட் அவசர கால நிதி ஒதுக்கீட்டின் கீழ் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்ட இந்த 84-வது பிளாக் (Blok 84) குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்பின் நிலைமை குறித்துப் பேசிய பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டானியல் அல்-ரஷித் ஹரோன், சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியம் (LPHS) வழங்கியுள்ள இந்த உதவி நிதி, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இச்சம்பவத்தால் வீடுகளை இழந்த ஒரு பகுதியினர் இன்னும் செக்சன் 24-இல் உள்ள டாலியா மண்டபத் தற்காலிகத் துயர்துடைப்பு மையத்தில் (PPS) தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சீரமைப்புப் பணிகள் குறித்து மேலும் விளக்கிய அவர், சேதமடைந்த வீடுகளின் கூரைகள், மேற்கூரைகள் (Ceiling) மற்றும் மின்சாரக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவை பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பப் படிப்படியாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்றார்.
மாநில வீட்டுவசதித் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷாவைத் தாம் நேரில் சந்தித்து இது குறித்துப் பேசியதாகவும், அவரின் துரித நடவடிக்கையினால் இந்த அவசர கால நிதி எல்.பி.எச்.எஸ். (LPHS) மூலம் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சீரமைப்புப் பணிகள் முழுமையடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகலாம் எனக் கணிக்கப்பட்டாலும், துயர்துடைப்பு மையங்களில் தங்கியுள்ள மக்கள் விரைவில் தங்களின் வீடுகளுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக இப்பணிகளை இன்னும் விரைவாக முடிக்குமாறு டானியல் அல்-ரஷிட் ஒப்பந்ததாரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மாலை வேளையில் வீசிய அந்தப் பயங்கரப் புயலில், பல அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.
மேலும், குடியிருப்பாளர்களின் வாகனங்கள் உள்ளிட்ட பல உடைமைகளும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த இயற்கைச் சீற்றத்தில் உயிர்ச் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









