ஷா ஆலாம், மே 2: மாநிலப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆறாம் படிவ மாணவர்களுக்கு வழங்கப்படும் 'கித்தா சிலாங்கூர்' புத்தக வவுச்சர்கள் இந்த ஆண்டும் தொடர்கிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட 2 மில்லியன் ரிங்கிட் நிதியால் 10,000 மாணவர்கள் பயனடைவார்கள்.
சிலாங்கூர் மந்திரி புசார் கட்டமைப்பின் (MBI) அறக்கட்டளைத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நூர் கூறுகையில், புத்தகங்கள் வாங்குவதை உறுதி செய்வதற்கும், உதவித்தொகை தவறாக பயன்படுத்தப் படுவதைத் தடுப்பதற்கும் 2023 முதல் சிலாங்கூரில் டிஜிட்டல் வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.
"பௌதீக வவுச்சர்களை வழங்கும்போது, அது தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் அதிகம். மற்றவர்கள் குறைந்த விலையில் வவுச்சர்களை விற்க வாய்ப்புள்ளது. பெர்பாடானான் கோத்தா புக்குவுடன் கலந்துரையாடிய பிறகு, அவர்களிடம் ஒரு டிஜிட்டல் புத்தகச் சந்தை இருப்பதை அறிந்தோம். அங்கிருந்துதான் 2023-இல் 200,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
இந்த முயற்சி உள்நாட்டுப் புத்தகத் துறைக்கும் பயனளிக்கிறது, ஏனெனில் இது திட்ட அமலாக்கத்தின் மூலம் தொழில்துறையின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்று அவர் கூறினார்.
"இந்த முயற்சி பின்னர் கூட்டரசு மட்டத்திலும் பின்பற்றப்பட்டு, பெர்பாடானான் கோத்தா புக்குவுடன் இணைந்து டிஜிட்டல் புத்தக வவுச்சர்கள் செயல்படுத்தப்பட்டன. சிலாங்கூரில், ஆறாம் படிவ மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இது நிச்சயமாக அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்றார் அவர்.
இளம் தலைமுறையினரிடையே வாசிப்பு ஆர்வத்தையும், அறிவு சார்ந்த கலாச்சாரத்தையும் வளர்க்கும் நோக்கில், மாநில அரசு இந்த ஆண்டும் புத்தக வவுச்சர்களை வழங்குவதைத் தொடர்கிறது. கடந்த ஆண்டு 4,000 ஆக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 10,000 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக மொத்தம் 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், இந்தத் திட்டம் அறிவுள்ள தலைமுறையை உருவாக்குவதற்கான மனித மூலதனத்தில் ஒரு முதலீடாகும், இது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியமாகும். பௌதீக புத்தகங்களைப் படிப்பது மாணவர்களின் கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்தவும், அறிவு மீதான ஆர்வத்தை வலுப்படுத்தவும் உதவும் என்று அவர் கருதுகிறார்.
'டிடேக் காசே' திட்டம் பரிகார வகுப்பு மாணவர்களுக்கு உதவுகிறது
சிலாங்கூரில் பரிகார வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2025-ஆம் ஆண்டில் 25,000 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 17,000 ஆகக் குறைந்துள்ளது.
இந்த வெற்றிக்கு 'டிடேக் காசே' (PDK) திட்டம் ஒரு முக்கிய காரணம் என்று அகமது அஸ்ரி நம்புகிறார்.
"மாநிலம் முழுவதும் இரண்டாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை பரிகார வகுப்புகளில் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கை 25,000-இலிருந்து 17,000 ஆகக் குறைந்துள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, PDK தொகுப்புகளை வழங்குவதன் மூலம் மாநில அரசு எடுத்த தலையீட்டு நடவடிக்கைகள் மற்றும் கல்வி அமைச்சின் முயற்சிகள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைக் காட்டுகிறது," என்றார் அவர்.
பெட்டாலிங் பெர் னா மாவட்டத்தில், நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்கள் 26,572 பேர் PTRS தொகுதிகளையும், 3,128 பரிகார மாணவர்கள் PDK தொகுதிகளையும் பெற்றனர். அடிப்படை வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்ணும் (3M) திறன்களை இன்னும் பெறாத 30,000 மாணவர்களுக்கு உதவுவதற்காக 'தெக்காட் பெண்டிடிக்கான் கித்தா சிலாங்கூர்' மூலம் 1 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு இலவச இணையம்
மேலும், சிலாங்கூரைச் சேர்ந்த 1,000 ஆறாம் படிவ மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அவர்களின் கற்றலுக்கு உதவும் வகையில், 'டத்தா இன்டர்நெட் சிலாங்கூர்' திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு இலவச இணையச் சேவை வழங்கப்படவுள்ளது. இதற்காக 500,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் 500 ஆறாம் படிவ மாணவர்கள் மற்றும் மாநில அரசுக்குச் சொந்தமான உயர்கல்வி நிறுவனங்களான யுனிவர்சிட்டி சிலாங்கூர் (UNISEL) மற்றும் யுனிவர்சிட்டி இஸ்லாம் சிலாங்கூர் (UIS) ஆகியவற்றின் 500 புதிய மாணவர்கள் பயனடைவார்கள் என்று அகமது அஸ்ரி விளக்கினார்.
ஆறாம் படிவ மாணவர்கள் 14 சாதனங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய கையடக்க வைஃபை சாதனத்தையும், UNISEL மற்றும் UIS மாணவர்கள் 'டாங்கிள்' அல்லது கையடக்க மோடம் சாதனத்தையும் பெறுவார்கள்.
"மாணவர் குழுவினர் இணைய வசதிகளை மிகவும் தீவிரமாகப் பயன்படுத்துவதைக் கண்டறிந்த பிறகு, 'டத்தா இன்டர்நெட் சிலாங்கூர்' திட்டம் அவர்கள் மீது கவனம் செலுத்துகிறது," என்று அவர் கூறினார்.
கித்தா சிலாங்கூர்' புத்தக வவுச்சர்கள் இந்த ஆண்டும் தொடர்கிறது
2 மே 2026, 3:12 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
இலக்கு உதவி தேவைகளை அடையாளம் காண தொழில் துறையுடன் சிலாங்கூர் ஈடுபடுகிறது
Pakiya
8 மே 2026

selangor
சிலாங்கூர் சுற்றுலா ஆண்டு 2026: 6 லட்சம் ரிங்கிட் மானியம் ஒதுக்கீடு - சுற்றுப்பயணத் திட்டங்களை மேம்படுத்த மாநில அரசு அழைப்பு
Shalini Rajamogun
5 மே 2026

selangor
ஆறு இடங்களில் அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை ஏற்பாடு
Shalini Rajamogun
5 மே 2026

national
அரச குடும்பத்தை அவமதிக்கும் வகையிலான பதிவுகளைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டத்தோ மந்திரி புசார்
Shalini Rajamogun, Sofia Nasir
4 மே 2026

உங்கள் கருத்து என்ன?




