உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள அரசாங்கம் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நிதி அமைச்சருமான அன்வார், கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த மாதம் உலகப் பொருளாதார நிலைமை மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என்றார்.
"பிப்ரவரி இறுதியில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 அமெரிக்க டாலராக இருந்தது. இன்று, அதன் விலை ஒரு பீப்பாய்க்கு 115 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு மிகவும் அதிகம், இதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
"பண்ணைகளில் வேலை செய்பவர்களுக்கு பாஸ்பேட் போன்ற உர பொருட்களுக்கு குறுகிய காலத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, மேலும் டீசல் விலையும் உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், லாரி ஓட்டுநர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.
இங்கு இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு தேசிய அளவிலான தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் தனது தொழிலாளர் தின உரையை ஆற்றும் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.இந்நிகழ்ச்சியில், துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அஹமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோஃப், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விளக்கிய அன்வார், பெரும்பாலான எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் விலையை உயர்த்திய போதிலும், புடி மடாணி RON95 (BUDI95) திட்டத்தின் கீழ் மலேசியா RON 95 பெட்ரோலின் மானிய விலையை ஒரு லிட்டருக்கு RM1.99 ஆகவே பராமரித்து வருகிறது என்றார்.
"அதனால்தான், எண்ணெய் விலையை ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற அளவில் நான் ஏன் கடுமையாகப் பராமரிக்கிறேன் என்பதைத் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்தார்.
"பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பெருநிறுவன துறையினரிடம் இருந்து யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. நான் யதார்த்தமாக இருக்கிறேன், நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் பாதுகாக்கிறேன், ஆனால் அதே நேரத்தில், குறிப்பாக அடிமட்டத் தொழிலாளர்களின் நிலை குறித்தும் நான் சிந்திக்கிறேன்," என்றார் அவர்.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரினால் ஏற்பட்ட உலகளாவிய விநியோக நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (PMKS) உதவுவதற்காக, வர்த்தக நிதி உத்தரவாத நிறுவனம் (SJPP) கீழ் கூடுதலாக 5 பில்லியன் ரிங்கிட் உத்தரவாதத்தை நிதி அமைச்சகம் மூலம் அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் சுமையைக் குறைக்க, பேங்க் நெகாரா மலேசியா (BNM) மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிலைத்தன்மை உதவி வசதிக்காக மேலும் 5 பில்லியன் ரிங்கிட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த உதவி 10 பில்லியன் ரிங்கிட்டாக உள்ளது.
"ஏனெனில், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதில் அவர்கள் ஒரு முக்கிய சக்தியாக உள்ளனர்," என்று அன்வார் கூறினார்.








