புத்ரா ஜெயா: தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதிகளில் உள்ள கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் அபாயகரமான அனைத்து நுழைவு வாயில்களுக்கும் அரச மலேசியப் போலீஸ் (பி.டி.ஆர்.எம்) படையின் மூத்த அதிகாரிகள் தலைமை ஏற்க வேண்டும் என்று மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS) பரிந்துரைத்துள்ளது.
எல்லை தாண்டிய குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற மற்றும் விரைவாகச் செயல்படக்கூடிய ஒரு நுழைவாயில் தளபதி தேவைப்படுவதாக அக்ப்ஸ் தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் கூறினார்.
"கடத்தல் அபாயம் உள்ள நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து நுழைவு வாயில் களுக்கும் போலீஸ் அதிகாரிகளைத் தலைமை ஏற்கச் செய்ய வேண்டும் என்று நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், இந்த ஆரம்பக் கட்டத்தில், எல்லை தாண்டிய குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்தவர்கள் எங்களுக்குத் தேவைப்படுகிறார்கள்," என்று அவர் இன்று பெர்னாமா தொலைக்காட்சி தயாரிப்பான 'ருவாங் பிச்சாரா' நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொண்டபோது கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் புக்கிட் காயூ ஹீத்தாம் அக்ப்ஸ் தளபதி சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்த பி.டி.ஆர்.எம்-க்கு அக்ப்ஸ் தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலுக்கு எனது ஆயிரக்கணக்கான நன்றிகள். எனது தளபதிக்கு அன்று வழங்கப்பட்ட உதவி மிகவும் விரைவாகவும் தீர்க்கமாகவும் இருந்தது. இது எனது அதிகாரிகளின் நம்பிக்கையை முழுமையாகப் பாதிக்காமல் பார்த்துக் கொண்டது," என்றார்.
"ஒரு நுழைவாயில் தளபதி பி.டி.ஆர்.எம்-லிருந்து வரும்போது, அவரிடம் ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் விரைவான ஆதரவு அமைப்பு இருப்பதால், இணைந்து செயல்படுவது எளிதாக இருக்கும்," என்றும் அவர் கூறினார்.
பிப்ரவரி 25-ஆம் தேதி அதிகாலை 5.40 மணியளவில் நடந்த அந்தச் சம்பவத்தில், புக்கிட் காயூ ஹீத்தாம் அக்ப்ஸ் தளபதி எஸ்.ஏ.சி. முகமட் நசாருடின் எம் நசீர் ஓட்டிச் சென்ற வாகனம், மலேசியா-தாய்லாந்து எல்லையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்களால் சுடப்பட்டது.
அக்ப்ஸ் நிறுவனத்தில் மலேசிய ஆயுதப்படை (ATM) முன்னாள் வீரர்களைச் சேர்ப்பது குறித்து கருத்து தெரிவித்த முகமட் ஷுஹைலி, நாட்டின் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தவும், முன்னாள் ராணுவ வீரர்களின் நலனைப் பாதுகாக்கவும் இது ஒரு சிறந்த நடவடிக்கை என்றார்.
அக்ப்ஸ் நிறுவனத்தில் முன்னாள் வீரர்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட வழிமுறையை தற்காப்பு அமைச்சுடன் (MINDEF) இணைந்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
"நானும் ஆயுதப் படைத் தளபதியும், தற்காப்பு அமைச்சின் தலைமைச் செயலாளரும் அக்ப்ஸ் நிறுவனத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க கூடிய ஒரு உறுதியான மற்றும் முழுமையான ஒரு வழியை ஆராய்ந்து வருகிறோம். அதே நேரத்தில், இளமையாக இருக்கும் இந்த முன்னாள் வீரர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதோடு, அவர்களின் நலன்களும் பாதுகாக்கப் படுவதை இது உறுதி செய்யும்," என்று அவர் மேலும் கூறினார்.
அக்ப்ஸ் ஒரு புதிய நிறுவனமாக இருந்தாலும், 2025-ஆம் ஆண்டு முழுவதும் பதிவு செய்யப்பட்ட கிட்டத்தட்ட 82.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பறிமுதல் உட்பட பெரும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளதாக முகமட் ஷுஹைலி கூறினார். இது அதன் பணியாளர்கள் நேர்மைக்குச் சான்றாகும்.
-- பெர்னாமா
தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதிகளில் கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படும் நுழைவு வாயில்களில் நடவடிக்கைகளுக்கு மூத்த போலீஸ் படை அதிகாரிகள் தலைமை ஏற்க ஆலோசனை
1 மே 2026, 3:56 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
துணை மின்நிலையத்தில் திருட முயன்ற ஆடவரை மின்சாரம் தாக்கியது
Pakiya
1 மே 2026
selangor
கிள்ளான் துறைமுகத்தில் மின்னணுக் கழிவுகள் அடங்கிய 9 கொள்கலன்கள் பறிமுதல்
Mavitthran
12 பிப்ரவரி 2026
national
35 ஆண்டுகால சேவைக்குப் பின்னர் ஓய்வு பெற்றார் அயோப் கான்
Bernama
26 ஜூலை 2026

selangor
பகடிவதை சம்பவங்களைத் தடுக்க பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் - கிள்ளான் மாவட்டக் காவல்துறை
Shalini Rajamogun
15 ஜூலை 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?

