கிள்ளான் துறைமுகத்தில் மின்னணுக் கழிவுகள் அடங்கிய 9 கொள்கலன்கள் பறிமுதல்

12 பிப்ரவரி 2026, 9:56 AM
கிள்ளான் துறைமுகத்தில் மின்னணுக் கழிவுகள் அடங்கிய 9 கொள்கலன்கள் பறிமுதல்

கிள்ளான், பிப். 12: மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS), கிள்ளான் துறைமுகத்தின் வெஸ்ட் போர்ட்டில் (Pelabuhan Barat) நடத்திய ‘ஓப்ஸ் கிரீன் ஷீல்ட்’ (Ops Green Shield) எனும் அதிரடிச் சோதனையில், சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மின்னணுக் கழிவுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட ஒன்பது கொள்கலன்களைப் பறிமுதல் செய்துள்ளது.

நேற்று பிற்பகல் 3 மணியளவில், துறைமுகத்தின் சிடி1 ஸ்கேனர் பரிசோதனை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்குக் கிள்ளான் துறைமுகத் தளபதி டத்தோ நிக் எசானி முகமட் பைசால் தலைமை தாங்கினார்.

இந்தச் சோதனையின்போது மொத்தம் 10 கொள்கலன்கள் ஆய்வு செய்யப்பட்டதில், ஒன்பது கொள்கலன்களில் விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்படாதப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதில் ஏழு கொள்கலன்களில் மின்னணுக் கழிவுகளும், ஒன்றில் ‘அலுமினியம் ட்ராஸ்’ (Aluminium Dross) எனப்படும் அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவுகளும், மற்றொன்றில் பிளாஸ்டிக் மற்றும் காகிதக் கழிவுகளும் இருந்தன.

தொழிற்சாலை இயந்திரங்களைக் கொண்டிருந்த ஒரு கொள்கலன் மட்டுமே உரிய ஆவணங்களுடன் சட்டப்பூர்வமாக இருந்தது கண்டறியப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM), சிரியம் பெர்ஹாட் (SIRIM), ராயல் மலேசியா போலீஸ் (PDRM) மற்றும் சுற்றுச்சூழல் துறை (JAS) உள்ளிட்ட பல்வேறு துறைகள் இந்த ஒருங்கிணைந்த சோதனையில் இணைந்திருந்தன.

பறிமுதல் செய்யப்பட்ட மின்னணுக் கழிவுகளில் பயன்படுத்தப்பட்ட சிபியுக்கள் (CPU), அச்சுப்பொறிகள், நகலெடுக்கும் இயந்திரங்கள் மற்றும் கனரக இயந்திரங்களின் உதிரிபாகங்கள் ஆகியவை அடங்கும்.

இந்தக் கொள்கலன்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைமுகங்களிலிருந்து அனுப்பப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.சுமார் 195,720 கிலோகிராம் எடையுள்ள இந்தப் பொருட்களை இறக்குமதி செய்ததில் ஒரு உள்ளூர் நிறுவனம் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த நிறுவனம், இக்கொள்கலன்களை மின்னணுக் கழிவுகள் மற்றும் உலோகக் கழிவுகள் என்று முறையாக அறிவித்திருந்தாலும், 1974-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் கீழ் இத்தகைய கழிவுகளை நாட்டிற்குள் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மலேசியாவை உலகின் கழிவுத் தொட்டியாக மாற்ற முயற்சிக்கும் இத்தகைய சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க, நாட்டின் நுழைவாயில்களில் சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என AKPS தெரிவித்துள்ளது. 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.