
ஷா ஆலம், ஏப்ரல் 25: மலேசிய விளையாட்டுப் போட்டியான சுக்மா 2026, ரை நடத்துவது தொடர்பான இறுதி முடிவை, ஏற்பாட்டாளரான சிலாங்கூரிடமே பினாங்கு மாநில அரசாங்கம் முழுமையாக ஒப்படைத்துள்ளது. நடப்பு நிலவரங்களையும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று அது கூறியுள்ளது.
சிலாங்கூர் மற்றும் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு (KBS) ஆகியவற்றைப் பொறுத்தே போட்டியைத் தொடர்வதா அல்லது ஒத்திவைப்பதா என்ற முடிவு அமையும் என்று பினாங்கு முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் கூறினார்.
"சுக்மா போட்டிக்கு சிலாங்கூர் ஏற்பாடு செய்வதால், இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து எந்தவொரு முடிவையும் எடுக்கும் உரிமை அவர்களுக்கே உள்ளது. போட்டியை நடத்த ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தால், அது அவர்களின் பரிசீலனையைப் பொறுத்தது" என்று புல்லட்டின் முத்தியாரா செய்தி இணையத்தளத்தில் அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறவிருக்கும் சுக்மா 2026 ஏற்பாடுகள் குறித்த முன்னேற்றங்கள் பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
வீரர்கள் தற்போது போட்டிக்குத் தயாராகும் இறுதிக்கட்டத்தில் இருப்பதால், தனது தரப்பு தற்போதைய முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"வீரர்கள் தங்களின் இறுதித் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர் என்று நான் நம்புகிறேன், எனவே எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும் நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்," என்று அவர் விளக்கினார்.
முன்னதாக, மத்திய கிழக்கு நெருக்கடி தணியும் வரையிலும், ஷா ஆலாம் விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரையிலும் சுக்மா 2026 போட்டியை ஒத்திவைக்குமாறு சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் பரிந்துரைத்திருந்தார்.
தற்போதைய பொருளாதாரச் சூழலில் போட்டியை நடத்துவதற்கான செலவு அதிகமாக இருப்பதால் இந்த ஆலோசனையைத் தெரிவித்ததாக மாட்சிமை தங்கிய மன்னர் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, சரவாக் உள்ளிட்ட பல மாநிலங்கள், வெளிநாடுகளில் பயிற்சி பெறுவது, தங்குமிடம், போக்குவரத்து மற்றும் இதர பயிற்சிகளுக்கான செலவுகள் உட்பட, தடகள வீரர்கள் ஏற்கனவே செய்துள்ள விரிவான தயாரிப்புகளைக் கருத்தில் கொண்டு சுக்மா தொடர வேண்டும் என நம்பிக்கை தெரிவித்தன.
சரவாக்கில் நடைபெற்ற சுக்மா 2024க்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகத் தயாராகி வருவதால், சிறிய அளவில் போட்டியைத் தொடர வேண்டும் என்று திரங்கானு, கிளாந்தான் மற்றும் சபா ஆகிய மாநிலங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன.
சுக்மா சிலாங்கூர் 2026 நடத்துவது குறித்த இறுதி முடிவு, ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்புக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜொஹாரி முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
#SUKMA2026 #SukanMalaysia #Selangor #PulauPinang #KBS #ChowKonYeow
original news : https://www.mediaselangor.com/ms/2026/04/353952
Photo link if have :







