கோலாலம்பூர், மார்ச் 10 — பினாங்கில் குறைந்தது 42 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாகப் புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 15 அன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், ஆணையர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
27 வயதுடைய உள்ளூர்வாசி ஒருவர் தலைமையிலான இந்தக் கும்பலில் 22 முதல் 35 வயதுக்குட்பட்ட எட்டு உறுப்பினர்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டு முதல் அண்மைக் காலம் வரை செயல்பட்டு வந்த இந்தக் கும்பல், சுமார் ஒரு மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள், மின்சாதனப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மூவர் வேறு குற்றங்களுக்காக ஏற்கனவே சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்கள் அனைவரும் பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








