தும்பாட்: சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த ஒவ்வொரு குடியேறிக்கும் 100 ரிங்கிட் கூலிக்காக 'தரை வழி ஆள்கடத்தல்' வேலையில் ஈடுபட்ட 18 வயது இளைஞர் ஒருவர், கம்போங் புனோஹானில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் சோதனையில் நேர்மறை முடிவு கண்ட அந்த இளைஞர், கோத்தா பாரு பேருந்து நிலையத்திற்கு சட்டவிரோத குடியேறிகளைக் கடத்துவதற்காக, தனது மூத்த சகோதரருக்குத் தெரியாமல் அவரின் மிட்சுபிஷி டிரைட்டன் ரக நான்கு சக்கர வாகனத்தைப் பயன் படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுப் பணிப் படையின் (பி.ஜி.ஏ.) தென்கிழக்கு பிரிகேட் தளபதி, எஸ்.ஏ.சி. அகமட் ராட்ஸி ஹுசைன் கூறுகையில், இரவு 11.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 9 வது பட்டாலியன் பி.ஜி.ஏ. உறுப்பினர்கள், அதிவேகமாகச் சென்ற அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து, தும்பாட், ஜாலான் தெர்போக்-கெலாபோரான் பெலுக்காரில் வைத்து அதனை மடக்கினர்.
"இருப்பினும், வாகனத்திலிருந்து இருவர் தப்பி ஓடிவிட்டனர். சோதனையின் போது, பின் இருக்கையில் மறைந்திருந்த ஐந்து வெளிநாட்டினர் கண்டுபிடிக்கப்பட்டனர்."
"தொடர் விசாரணையின் அடிப்படையில், அதிகாலை 4 மணியளவில் கம்போங் புனோஹானில் உள்ள ஒரு வீட்டை அதிரடியாகச் சோதனையிட்ட எங்கள் குழு, சம்பந்தப்பட்ட அந்த இளைஞரைக் கைது செய்தது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கைது செய்யப் பட்டவர்களிடமிருந்து வாகனம், ஐந்து கடவுச்சீட்டுகள், நான்கு கைபேசிகள் மற்றும் பல்வேறு நாட்டு நாணயங்கள் அடங்கிய ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இவற்றின் மொத்த மதிப்பு 126,551 ரிங்கிட் எனவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஐந்து வெளி நாட்டினரில் நால்வர் இந்தியப் பிரஜைகள் என்றும், ஒருவர் இலங்கைப் பிரஜை என்றும் அகமட் ராட்ஸி கூறினார். அவர்கள் தாய்லாந்திலிருந்து சட்டவிரோதப் பாதை வழியாக, படகு மூலம் ஆற்றைக் கடந்து நாட்டிற்குள் நுழைந்ததாகச் சந்தேகிக்கப் படுகிறது.
"விசாரணையில், மலேசியாவிற்குள் நுழைவதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நாட்டில் உள்ள முகவர்களிடம் சுமார் 3,000 ரிங்கிட் செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது."
"கைது செய்யப்பட்ட அனைவரும் குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 55(e) மற்றும் பிரிவு 6(1) ஆகியவற்றின் கீழ், அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952-இன் பிரிவு 15(1)-இன் கீழும் மேலதிக விசாரணைக்காக தும்பாட் மாவட்ட காவல்துறை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.
ஆள்கடத்தல்' வேலையில் ஈடுபட்ட 18 வயது இளைஞர் ஒருவர், கிளந்தான் கம்போங் புனோஹானில் கைது.
22 ஏப்ரல் 2026, 3:13 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
35 ஆண்டுகால சேவைக்குப் பின்னர் ஓய்வு பெற்றார் அயோப் கான்
Bernama
26 ஜூலை 2026

selangor
பகடிவதை சம்பவங்களைத் தடுக்க பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் - கிள்ளான் மாவட்டக் காவல்துறை
Shalini Rajamogun
15 ஜூலை 2026

national
கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் கூடுதல் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; சுற்றுலாத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
Shalini Rajamogun
10 ஜூன் 2026

national
புக்கிட் சாங்காட் ஆசாவில் மாயமான இளம் பெண் சடலமாக மீட்பு
Shalini Rajamogun
26 மே 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



