சிலாங்கூர் உணவுக் கிடங்கில் 5,000 டன் அரிசி சேமிப்பு; இரண்டு மாதங்களுக்குப் போதுமானது

21 ஏப்ரல் 2026, 7:48 AM
சிலாங்கூர் உணவுக் கிடங்கில் 5,000 டன் அரிசி சேமிப்பு; இரண்டு மாதங்களுக்குப் போதுமானது

ஷா ஆலம், ஏப்ரல் 21: சிலாங்கூர் உணவுக் கிடங்கில் (GMS) தற்போது சுமார் 5,000 டன் அரிசி சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இது மாநில மக்களின் இரண்டு மாதத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாகும்.

இந்தச் சேமிப்புக் கொள்ளளவை 15,000 டன்னாக உயர்த்தி, உணவுப் பொருட்களின் கையிருப்பு ஆறு மாதங்கள் வரை நீடிப்பதை உறுதி செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக சிலாங்கூர் மந்திரி புசார், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“சிலாங்கூர் உணவுக் கிடங்கு கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளில் 5,000 டன்னுக்கும் அதிகமான அரிசி சேகரிக்கப்பட்டுள்ளது. இதனை 15,000 டன்னாக அதிகரிக்கும் முயற்சிகளை நாங்கள் தீவிரப்படுத்துவோம்.”

“தற்போதைய 5,000 டன் கையிருப்புடன், இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இல்லாவிட்டாலும், ஒன்றரை முதல் இரண்டு மாதங்கள் வரை நம்மால் சமாளிக்க முடியும்.”

“இந்த அளவை 15,000 டன்னாக உயர்த்த முடிந்தால், உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளை ஐந்து முதல் ஆறு மாதங்களுக்கு உறுதிசெய்ய முடியும்,” என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் காரணமாக சிலாங்கூர் சந்திக்க நேரிடும் சாத்தியமான பாதிப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

அரிசி விநியோகத்தைத் தவிர, மக்களின் சீரான ஊட்டச்சத் தேவைகள் தொடர்ந்து பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக, இறைச்சி மற்றும் மீன் போன்ற புரத ஆதாரங்களையும் சிலாங்கூர் உணவுக் கிடங்கு சேமித்து வைத்துள்ளதாக அமிருடின் குறிப்பிட்டார்.

இந்த மாதத் தொடக்கத்தில், மாநில விவசாயத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஐ . ஆர் இஷாம் ஹாஷிம், சிலாங்கூரில் அவசர காலப் பயன்பாட்டிற்கான உணவுப் பொருட்கள் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருப்பதாக உறுதியளித்தார்.

சிலாங்கூர் உணவுக் கிடங்கில் தற்போதுள்ள கையிருப்பு, இந்த ஆண்டு இறுதி வரை ஒவ்வொரு மாதமும் சுமார் 20 விழுக்காடு மக்களின் தேவையை ஈடு செய்யும் திறன் கொண்டது என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டுக்குள், முக்கிய உணவுப் பொருட்கள் மற்றும் புரத ஆதாரங்களை உள்ளடக்கிய சேமிப்புக் கொள்ளளவை, மாதாந்திரத் தேவையில் 40 விழுக்காடாக அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.