ஆயர் ஹீத்தாம் வனக் காப்பகத்திற்கு அருகில் நிலம் விற்க பட்ட சர்ச்சை குறித்த சுபாங் நாடாளுமன்ற உறுப்பினரை  கெஅடிலான் கட்சித் தலைவர் சாடினார்

21 ஏப்ரல் 2026, 2:02 AM
ஆயர் ஹீத்தாம் வனக் காப்பகத்திற்கு அருகில் நிலம் விற்க பட்ட சர்ச்சை குறித்த சுபாங் நாடாளுமன்ற உறுப்பினரை  கெஅடிலான் கட்சித் தலைவர் சாடினார்

ஷா ஆலாம், ஏப்ரல் 21: ஆயர் ஹீத்தாம் வனக் காப்பகத்திற்கு அருகிலுள்ள நிலப் பிரச்சினை தொடர்பில், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென், மாநிலத்தின் தகவல் அறியும் சுதந்திர (FOI) சட்டத்தைப் பயன் படுத்தாதது ஏன் என கெஅடிலான் கட்சித் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பிரையன் இங் யி மின், அதிகாரப்பூர்வமற்ற கடிதங்களை அனுப்புவது மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவது போன்ற அணுகுமுறைகள், எந்தவொரு தரப்பினருக்கும் பதிலளிக்க வேண்டிய சட்டப்பூர்வ கடப்பாட்டை ஏற்படுத்தாது என்றார்.

அவர் கருத்துப்படி, சிலாங்கூரில் 2013-ஆம் ஆண்டு முதல் தகவல் அறியும் சுதந்திர சட்டம் அமலில் உள்ளது. இதன் கீழ், எந்தவொரு தனிநபரும் மாநில அரசாங்கத்திடம் இருந்து தகவல்களைக் கோரலாம், மேலும் அந்த விண்ணப்பத்திற்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கப்பட வேண்டும்.

“இது ஒரு கவனக்குறைவு அல்ல. மாண்புமிகு வோங் சென் மூன்று தவணைகளாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பெருநிறுவன சட்டப் பயிற்சியில் அனுபவம் வாய்ந்த ஒரு வழக்கறிஞர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“மலேசிய நாடாளுமன்றத்தில் சட்டம் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த விஷயங்களில் மிகவும் திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்களில் அவரும் ஒருவர். சிலாங்கூர் தகவல் அறியும் சுதந்திர சட்டம் 2011, 2013 முதல் நடைமுறையில் உள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

ஆயர் ஹீத்தாம் வனக் காப்பகத்திற்கு அருகில் சுமார் 68.4 ஹெக்டேர் நிலம் விற்கப் பட்டது தொடர்பாக அனுப்பப்பட்ட பல கடிதங்களுக்கு மாநில அரசு பதிலளிக்கத் தவறிவிட்டதாக வோங் சென் விமர்சித்திருந்தார். அப்பகுதியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கம் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் முதல் மூன்று அதிகாரப்பூர்வ கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் கருத்துரைத்த பிரையன், இந்தச் சட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர் தகவல்களைப் பெறுவதற்கான எந்தக் காரணத்தையும் கூறத் தேவையில்லை என்றும், விண்ணப்பத்திற்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

“மாண்புமிகு வோங் சென் வழங்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என்று கண்டறிந்தால், மேலும் விரிவான தகவல்களைக் கோருவதற்கு FOI வழிமுறையே சரியான பாதையாகும், நான்காவது பத்திரிகையாளர் சந்திப்பு அல்ல,” என்றார்.

சம்பந்தப்பட்ட நிலத்தின் நிலை குறித்த ஆரம்பகட்ட விளக்கம் ஏற்கனவே மாநில அரசாங்கத்தால் வழங்கப் பட்டு, பொதுவில் அணுகக் கூடியதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

“சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின், அந்த நிலம் 1926-ஆம் ஆண்டிலேயே ஆயர் ஹீத்தாம் வனக் காப்பகத்திலிருந்து வர்த்தமானியில் நீக்கப்பட்டுவிட்டது என்றும், அது இனி நிரந்தர வனக் காப்பகம் அல்ல என்றும் கடந்த 2025 டிசம்பரிலேயே ஆரம்பக்கட்ட விளக்கத்தை வழங்கியுள்ளார்.”

“மேலும், உள்ளூர் அதிகாரசபையான சுபாங் ஜெயா மாநகராட்சி (MBSJ) இதுவரை எந்த ஒரு மேம்பாட்டு விண்ணப்பத்தையும் பெறவில்லை. இந்தத் தகவல் பொதுவில் கிடைக்கிறது,” என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.