ஷா ஆலாம், ஏப்ரல் 21: உலகப் பொருளாதாரம் நிலையற்ற நிலையில் இருக்கும் வேளையில், மாநில அரசு அறிமுகப் படுத்தியுள்ள சிலாங்கூர் தாக்குப் பிடிப்பு வலுவூட்டல் தொகுப்புத் திட்டம் மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்தத் தொகுப்புத் திட்டம், மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் ஒரு 'டச் பாயிண்ட்' தன்மையைக் கொண்டிருப்பதாக டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ் கூறினார்.
"ஏறிவரும் பொருட்களின் விலை உயர்வைச் சமாளிக்க, மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப் பட்டுள்ள 'ஜுவாலான் ஏசான் ரஹ்மா' (JER) மலிவு விலை விற்பனைக்கான கூடுதல் மானியம் உட்பட, பல்வேறு முயற்சிகள் மூலம் இந்தத் தொகுப்பு மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது."
"டூசுன் துவா பகுதியில் இதற்கு பெரும் வரவேற்பு இருப்பதால், மேலும் பல JER நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும், பொருட்களின் விநியோகத்தை அதிகரிக்கவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்" என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
தொடர்புடைய வளர்ச்சியில், டீசல் விலை உயர்வு மக்களுக்கு பெரும் பாரமாக மாறியுள்ளதாகவும், இதைக் கையாள கூட்டரசு அரசாங்கம் ஒரு சிறந்த தீர்வைக் காண வேண்டும் என்றும் ஜோஹான் வலியுறுத்தினார்.
அரசு ஊழியர்களிடையே வீட்டிலிருந்து வேலை செய்யும் (BDR) திட்டத்தை அமல்படுத்துவது இந்தப் பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வு அல்ல என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
"டீசல் விலை உயர்வு, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களுக்கு உதவ கூட்டரசு மட்டத்தில் மேலும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்."
"டீசல் விலை உயர்வுப் பிரச்சினையை ஒட்டுமொத்தமாகத் தீர்க்கக்கூடிய ஒரு நடவடிக்கையாக BDR-ஐ நான் பார்க்கவில்லை. அரசாங்கம் இதைவிடச் சிறந்த அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது," என்றார் அவர்.
மேலும், டூசுன் துவா தொகுதியில் செலவினங்களைக் குறைக்கும் வகையில் சிக்கன நடவடிக்கைகளைத் தனது தரப்பு எடுத்துள்ளதாகவும் ஜோஹான் தெரிவித்தார்.
"பொது உபசரிப்பு நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்துவது உட்பட, தேவையற்ற செலவுகளைக் குறைத்துள்ளோம். உபசரிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை, நாங்கள் கலைஞர்களை அழைக்காமல் உள்ளூர் இசைக் குழுக்களைப் பயன்படுத்துகிறோம்," என்றார்.
மேற்கு ஆசியாவில் தற்போதைய புவிசார் அரசியல் நெருக்கடியை சமாளிப்பதற்காக மாநில அரசு, 131 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் சிலாங்கூர் தாக்குப் பிடிப்பு வலுவூட்டல் தொகுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த ஜூன் மாதம் தொடங்கும் இந்தத் திட்டத்தின் முதல் கட்டம், உணவு விநியோகப் பாதுகாப்பை வலுப் படுத்துவதோடு, பணவீக்க விகிதம் அதிகமாக உயர்வதைக் கட்டுப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.
உலகப் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள சிலாங்கூர் அரசு சிறப்புத் தொகுப்புத் திட்டம்: மூலோபாய எரிசக்தி இருப்பு (JER) மீது கூடுதல் கவனம்
21 ஏப்ரல் 2026, 1:58 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்ள மக்களுக்கு உதவும் சிலாங்கூர் தொகுப்புத் திட்டம்; 'ஜெர்' (JER) முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது
Pakiya
20 ஏப்ரல் 2026

selangor
RS-2 ஏகமனதாக ஏற்பு : 2030 வரையிலான சிலாங்கூரின் பொருளாதார கொள்கையாக அமையும்
Norrasyidah Arshad
13 ஆகஸ்ட் 2026

selangor
ஆகஸ்ட் 30, காஜாங் அரங்கில் சிலாங்கூர் மாநில அளவிலான 2026 தேசிய தினக் கொண்டாட்டம்
Media Selangor Team
11 ஆகஸ்ட் 2026

selangor
RM500 பில்லியன் பொருளாதாரத்தைத் தாண்டிய முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழவிருக்கிறது
Media Selangor
11 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?


