கிள்ளான், ஏப்ரல் 19: RM131 மில்லியன் மதிப்புள்ள சிலாங்கூர் மீட்சி வலுவூட்டல் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு உதவிகளை, 'NINE' எனப்படும் ஒரே செயலியில் ஒருங்கிணைக்க சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளை (MBI) திட்டமிட்டுள்ளது.
கித்தா சிலாங்கூர் பற்றுச்சீட்டு மற்றும் பொதுப் போக்குவரத்து கட்டண மானியத் திட்டம் போன்ற உதவிகளை வழங்குவதில் தொடர்புடைய பிற அரசு நிறுவனங்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக அதன் தலைவர் அஹ்மாட் அஸ்ரி ஜைனல் நோர் கூறினார். MBI அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட இந்த செயலி மூலம் உதவிகள் வழங்கப்படும் என்றார் அவர்.
"கித்தா சிலாங்கூர் பற்றுச்சீட்டு போன்ற உதவிகள் MBI அறக்கட்டளையின் கீழ் இல்லை என்றாலும், எங்களிடமும் உணவுப் பொட்டல உதவித் திட்டம் உள்ளது. இரண்டையும் ஒருங்கிணைக்க முடியும்."
"இந்தச் செயலியில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தி, தகுதியான பெறுநர்களைத் தேர்ந்தெடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உதவ 'NINE' செயலி மூலம் நாங்கள் ஒத்துழைக்க முடியும்," என்று நேற்று காப்பார், ஜாலான் பெலிம்பிங் பாலம் திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது அவர் கூறினார்.
இந்த செயலியின் மூலம், பயனர்கள் வாகன நிறுத்துமிடக் கட்டணம் செலுத்துதல், நகராட்சி மற்றும் உள்ளூர் மன்ற சேவைகளைப் பெறுதல், பொதுப் போக்குவரத்து வசதிகள் மற்றும் பிற சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அந்த தொகுப்புத் திட்டத்தின் அறிவிப்பு முழுவதையும், குறிப்பாக அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சிலாங்கூர் தள (PLATS) திட்டத்தையும் தனது தரப்பு ஆராயும் என்று அஹ்மாட் அஸ்ரி மேலும் கூறினார்.
"தற்போதைய பொருளாதாரச் சூழலில் தொழில்முனைவோர் தொடர்ந்து மீள்திறனுடன் இருப்பதை உறுதிசெய்ய, தற்போதுள்ள PLATS திட்டத்தின் மூலம் அவர்களுக்கு உதவுவதே எங்கள் முன்னுரிமையாகும்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில், மாநில அரசு RM 131 மில்லியன் ஒதுக்கீட்டில் சிலாங்கூர் மீட்சி வலுவூட்டல் தொகுப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வரும் ஜூன் மாதம் தொடங்கும் இதன் முதல் கட்டம், உணவுப் பாதுகாப்பை வலுப் படுத்துவதையும், பணவீக்க விகிதம் கடுமையாக உயர்வதைக் கட்டுப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நலிந்த பிரிவினருக்கு இலக்கிடப்பட்ட உதவிகளை வழங்கும் இத்திட்டம், மாநிலத்தின் 2026 வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மறுசீரமைக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துகிறது என்றும் அமிருடின் தெரிவித்தார்.
RM131 மில்லியன் மதிப்புள்ள சிலாங்கூர் மீட்சி வலுவூட்டல் தொகுப்பில் வழங்கப்படும் உதவிகளை, 'NINE' எனப்படும் ஒரே செயலியில் ஒருங்கிணைக்க- MBI திட்டம்.
19 ஏப்ரல் 2026, 4:55 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் 296 மாணவர்களுக்கு ‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ திட்டத்தின் கீழ் கல்வி உதவி வழங்கப்பட்டது
Shalini Rajamogun
25 மார்ச் 2026

selangor
வெளிநாட்டினர் உட்பட வியாபார உரிமம் இல்லாதவர்களுக்கு எதிராக சிப்பாங் நகராண்மைக் கழகம் அமலாக்க நடவடிக்கை.
Pakiya
19 ஏப்ரல் 2026

selangor
ஆறு இடங்களில் நாளை மலிவு விற்பனை தொடரும்
Shalini Rajamogun
17 ஏப்ரல் 2026

video
SELANGOR SEDIA INSENTIF, GALAK RAKYAT GUNA PENGANGKUTAN AWAM
Kathiravan Manoharan
17 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




