3,400 லிட்டர் மானிய டீசல் கடத்தல் முயற்சி முறியடிப்பு: சிலாங்கூர் KPDN நடவடிக்கை

18 ஏப்ரல் 2026, 6:34 AM
3,400 லிட்டர் மானிய டீசல் கடத்தல் முயற்சி முறியடிப்பு: சிலாங்கூர் KPDN நடவடிக்கை

ஷா ஆலம், ஏப்ரல் 18: கிள்ளான், பாண்டாமாரான் பகுதியில் இன்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN), சுமார் 3,400 லிட்டர் மானிய டீசலை முறைக் கேடாகக் கடத்த முயன்ற முயற்சியை முறியடித்தது.

மானியம் வழங்கப்படும் எரிபொருட்கள் தகுதியான தரப்பினரைச் சென்றடைவதை உறுதிசெய்யும் நோக்கில், மாநிலத்தில் உள்ள ஏழு KPDN அலுவலகங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் விளைவாக இந்த வெற்றி கிடைத்துள்ளதாக சிலாங்கூர் KPDN தலைமை அமலாக்க அதிகாரி முகமட் ஹனிசாம் கெச்சிக் தெரிவித்தார்.

"இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பண்டாமாரான் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 'பாண்டட்' வகை லோரி ஒன்றைக் கண்டனர். அதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

"சோதனையின் போது, தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு இடைநிலை மொத்த கொள்கலன்கள் (IBC) கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் டீசல் என சந்தேகிக்கப்படும் எரிபொருள் இருந்தது. மேலும், லோரியின் உடற்பகுதி இணைப்புக் குழாய் மற்றும் மீட்டர் பொருத்தப்பட்ட பம்ப் மூலம் மாற்றியமைக்கப்
பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.

லோரியின் ஓட்டுநர் தப்பியோட முயன்றதாகவும், ஆனால் அமலாக்க அதிகாரிகளால் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், சோதனையின் போது கிடைத்த கொள்முதல் ரசீதுகளின் அடிப்படையில், அந்த ஓட்டுநர் அருகிலுள்ள பல பெட்ரோல் நிலையங்களில் டீசலை நிரப்பியிருக்கலாம் என நம்பப்படுவதாக முகமட் ஹனிசாம் தெரிவித்தார்.

"முறைக்கேடாகக் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் சுமார் 3,400 லிட்டர் டீசல் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM100,000-க்கும் அதிகமாகும்."

"இந்த நடவடிக்கையின் மூலம், சுமார் RM20,000 மதிப்புள்ள நாட்டின் மானிய இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

30 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் ஓட்டுநர், கட்டுப்பாட்டுப் பொருட்களை வைத்திருப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் உண்டான சட்டப்பூர்வ ஆவணங்களைக் காட்டத் தவறினார்.

அவர் மீது தற்போது விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1961 மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் 1974-இன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.


original news :
https://mediaselangor.com/ms/2026/04/352682

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.