டீசல் மானியம் மும்மடங்கு உயர்வு, மாதம் ஒன்றுக்கு RM2.2 பில்லியனை எட்டியது

5 ஏப்ரல் 2026, 11:18 AM
டீசல் மானியம் மும்மடங்கு உயர்வு, மாதம் ஒன்றுக்கு RM2.2 பில்லியனை எட்டியது

கோத்தா பாரு, ஏப். 5: மானிய டீசல் கட்டுப்பாட்டுத் திட்டம் (SKDS) கடந்த மார்ச் மாதத்தில் மூன்று மடங்கு அதிகரித்து, மாதம் ஒன்றுக்கு RM2.2 பில்லியன் செலவை எட்டியுள்ளது. இதற்கு முன்பு இந்தத் தொகை மாதம் ஒன்றுக்கு RM700 மில்லியனாக இருந்தது.

உலக சந்தையில் டீசல் விலை கடுமையாக உயர்ந்ததன் விளைவாகவே மானியத்திற்கான செலவு அதிகரித்துள்ளதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி கூறினார்.

"உதாரணமாக, கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி ஒரு பீப்பாய் உலக டீசல் விலை 93 அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், மார்ச் 31ஆம் தேதி அது 239 அமெரிக்க டாலராக உயர்ந்தது. இது 158 விழுக்காடு உயர்வாகும்."

"தற்போதைய டீசல் விலை உயர்வின் போக்கின் அடிப்படையில், SKDS திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான டீசல் மானியத்தின் தேவை மாதம் ஒன்றுக்கு RM2.2 பில்லியன் என மதிப்பிடப்
பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் செலவழிக்கப் பட்ட ஆண்டுக்கான RM3.45 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம்," என்று அவர் கூறினார்.

இங்குள்ள கிளந்தான் மாநில மொத்த விற்பனையாளர்கள் மற்றும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கான ஓப்ஸ் டிரிஸ் 4.0 (ஒருங்கிணைந்த) அமலாக்கம் மற்றும் விநியோகக் கட்டுப்
பாட்டுச் சட்டம் 1961 குறித்த விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்துரைத்த அர்மிசான், மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் டீசல் விலை உயர்வு ஏற்பட்ட போதிலும், இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியத் திட்டத்தைத் தொடர அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.

"SKDS திட்டத்தின் கீழ், 10 வகையான பொது தரைவழிப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் 23 வகையான சரக்கு தரைவழிப் போக்குவரத்து வாகனங்கள் உட்பட மொத்தம் 33 வகையான வாகனங்கள் மானிய டீசலைப் பெற தகுதி பெற்றுள்ளன."

"பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள், பொது தரைவழிப் போக்குவரத்து வாகனங்களுக்கு லிட்டருக்கு RM1.88 என்ற மானிய விலையிலும், சரக்கு தரைவழிப் போக்குவரத்து வாகனங்களுக்கு லிட்டருக்கு RM2.15 என்ற மானிய விலையிலும் டீசலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்," என்றார்.

எரிபொருள் வாங்கும் செலவை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் ஏற்க வேண்டியுள்ள கோரிக்கை குறித்து கருத்துரைத்த அர்மிசான், இது குறித்து நிதி அமைச்சுடன் (MOF) பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

"தற்போது நாம் சிந்திக்கக்
கூடிய அணுகு முறைகளில் ஒன்று, அந்தத் தொகையைத் திரும்பச் செலுத்தும் செயல்முறையை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பது பற்றி நிதி அமைச்சுடன் விவாதிப்போம். இதன் மூலம் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் தொகையை விரைவில் பெற முடியும்."

"இந்த உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் நாம் அனைவரும் இணைந்து நிலைத்தன்மையை தொடர, அவர்களும் தங்களின் தற்செயல் திட்டங்களை மேற்கொள்வார்கள் என நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.
https://mediaselangor.com/ms/2026/04/350676

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.