கிள்ளான் பள்ளத்தாக்கில் வேலை இழப்பு அதிகரிப்பு: முதலீட்டு நிறுவனங்களின் மறுசீரமைப்பே காரணம் என பாப்பாராய்டு விளக்கம்

16 ஏப்ரல் 2026, 10:02 AM
கிள்ளான் பள்ளத்தாக்கில் வேலை இழப்பு அதிகரிப்பு: முதலீட்டு நிறுவனங்களின் மறுசீரமைப்பே காரணம் என பாப்பாராய்டு விளக்கம்

ஷா ஆலம், ஏப்ரல் 16: முதலீடு சார்ந்த நிறுவனங்கள் மேற்கொண்ட மறுசீரமைப்பு மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளே கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலானோர் வேலை இழக்க முக்கியக் காரணமாகும்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சார்ந்துள்ள தொழில்துறைகளைக் கொண்ட மாநிலங்கள் இத்தகைய சூழலை எதிர்கொள்ள நேரிடும் என மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வி.பாப்பாராய்டு தெரிவித்தார்.

"சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் பெரும்பாலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சார்ந்துள்ள தொழில்துறைகளால் இயக்கப்படுகின்றன."

"அதன் காரணமாக, பல நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கவோ அல்லது செயல்பாடுகளை நிறுத்தவோ விரும்பலாம், அதனால் சில வேலை இழப்புகள் ஏற்படுகின்றன," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கேசோ) தரவுகளை மேற்கோள் காட்டி ஹோங் லியோங் முதலீட்டு வங்கி வெளியிட்ட அறிக்கைக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கடந்த மார்ச் மாதம் மலேசியாவில் ஏற்பட்ட 5,900 வேலை இழப்புகளில், சிலாங்கூரில் 29.3 விழுக்காடும், கோலாலம்பூரில் 25.6 விழுக்காடும் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை பிப்ரவரியில் பதிவான 7,500 வேலை இழப்புகளுடன் ஒப்பிடுகையில் 21.3 விழுக்காடு குறைவாகும்.

மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக சில துறைகள், குறிப்பாக சுற்றுலாத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

"உலகளாவிய நடப்புப் பிரச்சனைகளால் சுற்றுலாத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாறாக, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இன்னும் வலுவாக உள்ளன," என்றார் அவர்.

வேலை இழந்த மக்களுக்கு உதவ, வேலை தேடுபவர்களை முதலாளிகளுடன் இணைக்கும் நோக்கில் தொழில் சந்தைகள் போன்ற பல்வேறு முயற்சிகளை சிலாங்கூர் அரசு மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

"சமீபத்தில் பந்திங்கில் 45,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுடன் நாங்கள் ஒரு வேலைவாய்ப்பு
சந்தையை நடத்தினோம். இது சிலாங்கூர் நிலையானதாக இருப்பதையும், இன்னும் பல வாய்ப்புகள் இருப்பதையும் காட்டுகிறது," என்றார்.

வேலை தேடுபவர்களைப் பொருத்தமான பதவிகளில் அமர்த்த, பெர்கேசோ மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகளுடன் மாநில நிர்வாகம் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.