விமானப் போக்குவரத்து கட்டணங்களுக்கான கடன் காலத்தை நீட்டித்தது மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்

14 ஏப்ரல் 2026, 9:22 AM
விமானப் போக்குவரத்து கட்டணங்களுக்கான கடன் காலத்தை நீட்டித்தது மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்

புத்ராஜெயா, ஏப்ரல் 14 - விமான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், விமானக் கட்டணம் மற்றும் சேவை வரிகளைச் செலுத்துவதற்கான கடன் தவணைக் காலத்தை 60 நாட்கள் வரை நீட்டிக்கும் திட்டத்தை மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) வரும் மே 1- ஆம் தேதி முதல் அமல் படுத்தும்.

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள சவாலான காலகட்டத்தில், விமானப் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் தொடர்ந்து பாதுகாக்கப் படுவதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை முக்கியமானது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

"இந்த புவிசார் அரசியல் நெருக்கடியால், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களின் சர்வதேச விமானச் சேவைகள் பெருமளவில் ரத்து செய்யப் பட்டுள்ளன," என்றார் அவர்.

"கடந்த மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, அப்பகுதிக்குச் செல்லவிருந்த தினசரி விமானச் சேவைகளில் சுமார் 75 விழுக்காடு ரத்து செய்யப்பட்டதால், நிலைமை மிகவும் மோசமடைந்தது," என்று அவர் இன்று எரிபொருள் விலை உயர்வைக் கையாள்வதற்கான இரயில் பயன்பாட்டு பிரச்சாரம் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த நிலை நீடித்தால், அது சர்வதேசப் பயணிகளின் நம்பிக்கையைக் குறைத்து, 2026-ஆம் ஆண்டு முழுவதும் சுமார் 15 பில்லியன் ரிங்கிட் முதல் 150 பில்லியன் ரிங்கிட் வரை பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடும் என்று லோக் கூறினார்.

மேலும், கவாய் மற்றும் காமாத்தான் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் மற்றும் லபுவான் இடையே பயணம் செய்யும் மலேசியர்களுக்கு 50 ரிங்கிட் விமான டிக்கெட் தள்ளுபடியை CAAM அறிமுகப்படுத்தியுள்ளது.

"இந்தத் தள்ளுபடி செலவினங்களுக்காக CAAM 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கும். மே 15 முதல் ஜூன் 14 வரை நீடிக்கும் இந்தத் தள்ளுபடி காலத்தில் சுமார் 100,000 பயணிகள் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது," என்றார் அவர்.

இந்த இரண்டு கூடுதல் முயற்சிகளும் பொதுமக்களுக்கு, குறிப்பாக வேலை, கல்வி, குடும்ப விவகாரங்கள் மற்றும் பிற தினசரி தேவைகளுக்காகப் பயணம் செய்பவர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கும் என்று போக்குவரத்து அமைச்சு நம்புவதாக லோக் குறிப்பிட்டார்.

"நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பு அனைத்துத் தரப்பு மக்களாலும் விரும்பப்படும் முதன்மைத் தேர்வாக இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் இந்த நடவடிக்கை காட்டுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.