ஷா ஆலம், மார்ச் 12 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) ஏரோட்ரெயின் சேவையில் கடந்த ஆண்டு ஜூலை முதல் ஏற்பட்ட தடங்கல்களுக்குத் தொழில்நுட்பக் கோளாறுகளே முதன்மைக் காரணம் எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அவர், ஏரோட்ரெயினின் பெட்டிகள் (Rolling Stock), சமிஞை அமைப்புகள் (Signalling Systems) மற்றும் மின் விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட சிக்கல்களே முந்தைய சேவைத் தடங்கல்களுக்குக் காரணமாக அமைந்தன என்று விளக்கமளித்தார்.
இருப்பினும், கடந்த மாதம் முதல் ஏரோட்ரெயின் சேவை மீண்டும் முழுமையான செயல்பாட்டுத் திறனை எட்டியுள்ளதாக அவர் மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்து கொண்டார். பிப்ரவரி 8-ஆம் தேதி வரையிலான சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்த போக்குவரத்து அமைப்பு 100 விழுக்காடு செயல்பாட்டுத் தகுதியைப் பெற்றுள்ளது.
இதுவரை மொத்தம் 77,741 இருவழிப் பயணங்களை மேற்கொண்டுள்ள ஏரோட்ரெயின், சுமார் 1.17 கோடி (11.78 மில்லியன்) பயணிகளை வெற்றிகரமாக ஏற்றிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, 2023 மார்ச் மாதம் ஏற்பட்ட பெரும் முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இச்சேவை, கடந்த ஆண்டு ஜூலையில் மீண்டும் தொடங்கப்பட்டது.
தற்போது பயன்பாட்டிலுள்ள ஏரோட்ரெயின் மாடல், பழைய அமைப்பை விட நவீனமானது மற்றும் அதிகத் திறன் கொண்டது என்றும் அமைச்சர் கூறினார். குறிப்பாக, பழைய 'CX 100' மாடலுக்குப் பதிலாக, இப்போது அதிநவீன 'Alstom APM 300R' மாடல் பயன்படுத்தப்படுகிறது.
புதிய மாடலில் நவீன 'ஏசி மோட்டார்' (AC Motor) மற்றும் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது எரிசக்தி சேமிப்பிற்கு உதவுவதோடு, ஒரே நேரத்தில் அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது என்றும் அவர் விளக்கினார்.
பயணிகளின் வசதியை உறுதிப்படுத்தும் வகையில், மலேசிய விமான நிலையங்கள் நிறுவனம் (MAHB) இந்தச் சேவையைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அந்தோணி லோக் உறுதியளித்தார்.








