கைவிடப்பட்ட பெண் குழந்தை தொடர்பாக  18 மற்றும் 19 வயதுடைய சந்தேக நபர்கள்   தாமான் யூனிவர்சிட்டி வட்டாரத்தில்  கைது

14 ஏப்ரல் 2026, 4:07 AM
கைவிடப்பட்ட பெண் குழந்தை தொடர்பாக  18 மற்றும் 19 வயதுடைய சந்தேக நபர்கள்   தாமான் யூனிவர்சிட்டி வட்டாரத்தில்  கைது

ஜோகூர் பாரு: கடந்த சனிக்கிழமை, ஸ்கூடாய், தாமான் யூனிவர் சிட்டியில் உள்ள ஒரு தொழுகைக்கூடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை தொடர்பான விசாரணைக்கு உதவ, ஓர் ஆணையும் பெண்ணையும் காவல்துறை கைது செய்துள்ளது.

உள்ளூர்வாசிகளான 18 மற்றும் 19 வயதுடைய அவ்விரு சந்தேக நபர்களும், இன்று அதிகாலை 2.15 மணியளவில் தாமான் யூனிவர்சிட்டி வட்டாரத்தில் வைத்து ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப் பட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ராடின் ரம்லான் ராடின் தாஹா தெரிவித்தார்.

"விசாரணையில், இருவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களுக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையின் முடிவும் எதிர்மறையாக வந்துள்ளது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

கைது செய்யப்பட்ட இருவரும் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி கோருவதற்காக இன்று ஜோகூர் பாரு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குழந்தையைக் கைவிடும் நோக்கத்துடன் வீசிச் சென்ற குற்றத்திற்காக, தண்டனைச் சட்டம் பிரிவு 317-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.

நேற்று, ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, ஒரு பெண் குழந்தை உயிருடன், துண்டால் சுற்றப்பட்டு, தொப்புள் கொடியுடன் ஒரு மசூதியின் வாகன நிறுத்துமிடத்தில் கண்டெடுக்கப்பட்டது.

குழந்தையின் அழுகுரலைக் கேட்ட ஒரு சாட்சி அளித்த தகவலின் பேரில், இரவு 7.33 மணியளவில் தங்களுக்குப் புகார் கிடைத்ததாக ராடின் ரம்லான் கூறினார். அக்குழந்தை சுல்தானா அமினா மருத்துவமனைக்கு மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப் பட்டதுடன், தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.