உலு சிலாங்கூர், ஏப்ரல் 13: அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படும் இந்திய சமூகத் தலைவர்களின் (KKI) பங்கை வலுப்படுத்தும் நோக்கில், 2026 முதல் 2027 வரையிலான பதவிக் காலத்திற்கான நியமனத்தில் புதிய வழிமுறையாக தகுதித் தேர்வை சிலாங்கூர் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மாநில மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு, இந்த அணுகுமுறை ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் பொறுப்புகளைப் புரிந்துகொள்வதோடு, திறம்பட செயல்படும் திறனையும் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்காகச் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
அவரது கூற்றுப்படி, இந்த தகுதித் தேர்வில் படித்தல், எழுதுதல் மற்றும் தொடர்புகொள்தல் போன்ற அடிப்படைத் திறன்கள் அடங்கும். நியமிக்கப்பட்ட அனைத்து இந்திய சமூகத் தலைவர்களும் இந்த மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அவர் கூறினார்.
"உண்மையிலேயே தகுதியும் நம்பகத்தன்மையும் கொண்ட நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்ய, இந்த ஆண்டு நாங்கள் அறிமுகப்படுத்திய ஒரு புதிய செயல்முறை இதுவாகும்," என நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில இந்திய சமூகத் தலைவர்களுக்கான பதவியேற்புப் பயிற்சி மற்றும் நியமனக் கடிதம் வழங்கும் விழாவில் அவர் கூறினார்.
இதுவரை, 55 இந்திய சமூகத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 பேர் இந்த விழாவில் நியமனக் கடிதங்களைப் பெற்றனர், மீதமுள்ளவர்களின் நியமனம் மேலும் பரிசீலனையில் உள்ளது.
அதே சமயம், ஏற்பாடு செய்யப்பட்ட பதவியேற்புப் பயிற்சி, புதிய மற்றும் ஏற்கனவே உள்ள இந்திய சமூகத் தலைவர்களுக்கு மாவட்டம் மற்றும் நில அலுவலகம், மலேசிய காவல்துறை மற்றும் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு (ICU) உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய விரிவான விளக்கத்தை அளிப்பதாகப் பாப்பாராய்டு கூறினார்.
நிர்வாகம், சமூகப் பாதுகாப்பு, செஜாத்தி மடாணி முயற்சி உள்ளிட்ட அரசாங்கத் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் மாநில அரசின் மென்பொருள் பயன்பாட்டு முறைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை இந்தப் பயிற்சியின் உள்ளடக்கங்களில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
"சிலாங்கூரில் உள்ள இந்திய சமூகத் தலைவர்கள் மிகவும் விவேகமாக உள்ளனர். இதற்கு முன்பு செஜாத்தி மடாணி உட்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர். எதிர்காலத்தில், அந்தந்த பகுதிகளில் இந்த முயற்சியை இன்னும் விரிவாகச் செயல்படுத்துவதன் மூலம் அவர்களின் பங்கு விரிவுபடுத்தப்படும்," என்றார்.
சேவைகளை வழங்கும் திறனை மேம்படுத்தும் முயற்சியில், அனைத்து இந்திய சமூகத் தலைவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்திற்குச் சிலாங்கூர் மந்திரி புசார் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"அவர்கள் புகார்களை அதிகாரப்பூர்வமாக நிர்வகிக்கவும், தகவல் தொடர்பு மற்றும் அறிக்கை திறனை மேம்படுத்தவும் இந்த முயற்சி முக்கியமானது," என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு இந்திய சமூகத் தலைவரும் நேர்மைக்கு முன்னுரிமை அளிப்பதுடன், அரசாங்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், உள்ளூர் சமூகத்தின் நலனைப் பாதுகாப்பதிலும் அரசாங்கத்தின் உத்திசார் பங்காளியாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய சமூகத் தலைவர்களின் பங்கை வலுப்படுத்த, தகுதித் தேர்வைச் சிலாங்கூர் அரசு அறிமுகம் செய்கிறது
13 ஏப்ரல் 2026, 9:56 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் பல்வேறு துறைகளில் 160,566 வேலை காலியிடங்கள் தயார்
Shalini Rajamogun
22 ஜூன் 2026

selangor
இலவச ஹென்னா மற்றும் ஓவியக் கலை வகுப்பு
Shalini Rajamogun
11 நவம்பர் 2025

selangor
கல்வியே இந்தியச் சமுதாயத்தை உயர்த்தும் உந்துசக்தி 'சித்திரை கலை விழாவில்' மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் உரை!
Kathiravan Manoharan
2 மே 2026

selangor
சிலாங்கூரின் i-SEED திட்டம்; 200 இந்திய தொழில்முனைவர்கள் வியாபார உபகரண உதவியைப் பெற்றுள்ளனர்
Latchumy Ramamoorthy
30 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



