பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 13: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் (எம்பிபிஜே) சிறுவர் மன்ற உறுப்பினர்கள், நகரத் திட்டமிடலில் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இதன் மூலம், சிறுவர்களின் தேவைகள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கின்றனர்.
பெட்டாலிங் ஜெயா சிறுவர் மன்றத்தின் 2024/2025 அமர்வின் முன்னாள் உறுப்பினரான 17 வயது நூர்யுல் இடீனா அப்துல் ரஹ்மான், இந்தத் தளம் சிறுவர்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாக உள்ளூராட்சி மன்றத்திடம் தெரிவிக்க வாய்ப்பளிப்பதாகக் கூறினார்.
பெரியவர்களால் பெரும்பாலும் கவனிக்கப்படாத சிறுவர்களின் பல தேவைகளை இந்த மன்ற உறுப்பினர்களின் பங்களிப்பின் மூலம் முன்னிலைப்படுத்த முடிவதாக அவர் விளக்கினார்.
"நகரத் திட்டமிடலை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், முழுமையானதாகவும் காணும் வகையில், சிறுவர்களின் குரலை எம்பிபிஜே-விடம் கொண்டு சேர்ப்பதே எங்களின் பங்கு," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பெட்டாலிங் ஜெயா சிறுவர் மன்றத்தின் மற்றொரு முன்னாள் உறுப்பினரான 19 வயது லெனின், இந்தத் திட்டத்தில் பங்கேற்பது, சமூகத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டின் உண்மையான செயல்முறைகள் குறித்து இளைஞர்களுக்கு ஆரம்பத்திலேயே ஒரு புரிதலை வழங்குவதாகக் கூறினார்.
எதிர்காலத்தில் சிறந்த தீர்வுகளுக்கு வழிவகுக்கும் அனுபவங்களையும் அறிவையும் இத்திட்டம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
"இந்த முயற்சி, நாங்கள் பேசுவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தகவல் தொடர்பு திறன், விமர்சன சிந்தனை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றையும் வளர்க்கிறது," என்றார் அவர்.
நகர மேம்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, உள்ளூர் சமூகத்தைப் பற்றி அக்கறை கொண்ட ஒரு இளம் தலைமுறையை உருவாக்குவதால் இதுபோன்ற திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற ஒரு முழுமையான சூழலை உருவாக்குவதில், குறிப்பாக நகரத் திட்டமிடலில் சிறுவர்களின் கருத்துக்கள் கூடுதல் மதிப்பைச் சேர்க்கும் என்பதை இந்த முயற்சி நிரூபிக்கிறது என்றார்.
நகரத் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தில் சிறுவர்களின் குரலைப் பிரதிநிதிப்பதற்காக, 2026/2027-ஆம் ஆண்டுக்கான அமர்விற்கு 30 சிறுவர் மன்ற உறுப்பினர்களை எம்பிபிஜே நியமித்துள்ளது.
இந்த நியமனங்களில் சிறப்பு ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைச் (PPKI) சேர்ந்த மூன்று சிறுவர்களும் அடங்குவர், இது மாற்றுத்திறனாளிகளின் கருத்துக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதை நிரூபிக்கிறது என்று பெட்டாலிங் ஜெயா மாநகர் முதல்வர் கூறினார்.
பெட்டாலிங் ஜெயா சிறுவர் மன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்குத் தலைமைத்துவ மேலாண்மை மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுவதாக டத்தோ முகமது ஸஹ்ரி சமிங்கோன் தெரிவித்தார்.








