புத்ராஜெயா, ஏப்ரல் 13: தற்போது எரிபொருள் விலை உயர்ந்துள்ள சூழலில், போக்குவரத்துத் துறை சார்ந்த விவகாரங்களுக்காகப் பொதுமக்கள் நேரில் அலுவலகங்களுக்கு வருவதைத் தவிர்த்து, சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே) வழங்கியுள்ள டிஜிட்டல் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதன் மூலம் பெட்ரோல் செலவு மற்றும் நேர விரயத்தைத் தவிர்க்க முடியும் என ஜே.பி.ஜே தலைமை இயக்குநர் டத்தோ எடி ஃபட்லி ராம்லி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு டிஜிட்டல் முறை "விரல் நுனியில் சேவை" என்ற அடிப்படையில் பல வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது ஜே.பி.ஜே அலுவலகங்களில் நிலவும் கூட்ட நெரிசலைக் குறைக்க உதவுவதோடு, சிறப்பான தீர்வாகவும் அமையும் என்றார்.
தற்போது ஜே.பி.ஜே-வின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழியாகச் சுமார் 33 வகையான பரிவர்த்தனைகளையும், 'MyJPJ' செயலி வழியாக 16 வகையான சேவைகளையும் பொதுமக்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் விளக்கமளித்தார்.
நேரில் வர வேண்டிய அவசியம் இல்லாத அனைத்துப் பணிகளுக்கும் இந்த டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனமான செயலாகும் என்று எடி ஃபட்லி வலியுறுத்தினார்.
மேலும், அரசாங்கத்தின் இலக்கிற்கு ஏற்ப மிகவும் வேகமான, திறமையான மற்றும் நேர்மையான சேவையை மக்களுக்கு வழங்குவதில் ஜே.பி.ஜே உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த அணுகுமுறை நாட்டின் எரிசக்தி சேமிப்புத் திட்டத்திற்கு வலு சேர்ப்பதுடன், மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான உறவை மிகவும் எளிமையாகவும் ஆக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.








