கோத்தா கெமுனிங்கில் இலவசச் சுகாதாரப் பரிசோதனை திட்டம் ஏற்பாடு: பொதுமக்களுக்கு அழைப்பு

13 ஏப்ரல் 2026, 3:01 AM
கோத்தா கெமுனிங்கில் இலவசச் சுகாதாரப் பரிசோதனை திட்டம் ஏற்பாடு: பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஏப்ரல் 13: கோத்தா கெமுனிங் மாநிலச் சட்டமன்றத் தொகுதி அளவிலான 'சிலாங்கூர் சாரிங்' இலவசச் சுகாதாரப் பரிசோதனைத் திட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, செக்சன் 28-இல் உள்ள எம்.பி.எஸ்.ஏ கெனாங்கா (MBSA Kenanga) மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியும் நோக்கில் இந்தச் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த நடவடிக்கையில், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு மாநிலப் பொதுச் சுகாதாரத் துறை நிர்வாகக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கேட்டுக்கொண்டார்.

இத்திட்டத்தின் கீழ் உடல் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை ஆகியவற்றுடன் புற்றுநோய், கண் மற்றும் பல் தொடர்பான விரிவான மருத்துவப் பரிசோதனைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இப்பரிசோதனையில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள், 'செலங்கா' (SELangkah) செயலி வாயிலாக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அச்செயலியில் உள்ள ஆரம்பக்கட்டக் கேள்வித்தாளின் அடிப்படையில், ஒவ்வொரு தனிநபரின் உடல்நிலை அபாயக் காரணிகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.

'செலங்கா' செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் 'சிலாங்கூர் சாரிங்' பொத்தானை அழுத்தி, விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, முகாம் நடைபெறும் இடம் மற்றும் தேதியைத் தேர்வு செய்வதன் மூலம் எளிய முறையில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்குப் பொதுமக்கள் 'செல்கேர்' (Selcare) அவசர அழைப்பு எண்ணான 1-800-22-6600-ஐத் தொடர்பு கொள்ளலாம்.

குடும்பப் பின்னணியில் தீராத நோய்கள் உள்ளவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு சிலாங்கூர் மாநில அரசு வலியுறுத்துகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.