ஷா ஆலம், ஏப்ரல் 9: மலேசிய அரசக் காவல்துறையின் (PDRM) வெளிப்படைத்தன்மையையும் பாதுகாப்புத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், ரோந்துப் பணிகளில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் உடல் கேமராக்கள் (BWC) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலக் காவல்துறை தலைமையகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கு மொத்தம் 7,648 உடல் கேமராக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
2024 அக்டோபர் மாதம் முதல் முன்னிலை அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளித்துத் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது அதன் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக 'பெரித்தா ஹரியான்' செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் (JPJKK) இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரீ ஹசான் பஸ்ரி, இதுவரை அத்துறையைச் சேர்ந்த 6,449 காவலர்களுக்கு இந்தச் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதில் ரோந்து கார் பிரிவு (MPV), மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவு (URB) மற்றும் சுற்றுலாப் பிரிவு (UPP) அதிகாரிகள் அடங்குவர்.
மாநில அளவிலான விநியோகத்தைப் பொறுத்தவரை, சிலாங்கூர் மாநிலம் அதிகபட்சமாக 1,328 யூனிட்டுகளைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பேராக் (968), ஜோகூர் (952), சரவாக் (736), சபா (704), பினாங்கு (472), பகாங் (440), கெடா (400) மற்றும் கோலாலம்பூர் (360) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
மேலும், நெகிரி செம்பிலான் மற்றும் கிளந்தான் மாநிலங்களுக்கு தலா 328 யூனிட்டுகளும், திரங்கானு (288), மலாக்கா (192), பெர்லிஸ் (120) மற்றும் புக்கிட் அமான் தலைமையகத்திற்கு 32 யூனிட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.
காவல்துறையின் சேவையை மேலும் நவீனப்படுத்தும் நோக்கில், 13-வது மலேசியத் திட்டத்தின் (RMK13) கீழ் கூடுதலாக 10,000 உடல் கேமராக்களைப் பெறத் திட்டமிட்டுள்ளதாக டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரீ குறிப்பிட்டார்.
அடுத்தகட்ட கொள்முதலில், நீண்ட நேரம் உழைக்கக்கூடிய மின்கலத் திறன் (Battery life) உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட கேமராக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தொழில்நுட்பப் பயன்பாடு காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பெர்னாமா








