ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மலேசிய எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதி

8 ஏப்ரல் 2026, 4:28 AM
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மலேசிய எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதி

கோலாலம்பூர், ஏப்ரல் 8: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மலேசிய எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதித்த ஈரானின் முடிவுக்கு மலேசியா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற கோலாலம்பூர்-அங்காரா 2026 கலந்துரையாடலுக்கு இடையே, மலேசியாவுக்கான ஈரான் தூதர் வாலியோல்லா முகமதியைச் சந்தித்தபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

"நாட்டின் எரிசக்தி விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், மக்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது" என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் இன்னும் சிக்கித் தவிக்கும் மேலும் ஆறு மலேசியக் கப்பல்கள், படிப்படியாக அப்பகுதியைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிராந்தியத்தில் ஏற்பட்ட பதட்டமான சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த ஏழு மலேசியக் கப்பல்களில் ஒன்றுக்கு பாதுகாப்பான பாதை வழங்கப்பட்டு, அது தனது இறுதி இலக்கை நோக்கிப் பயணத்தைத் தொடர்வதாக வெளியுறவு அமைச்சு முன்னதாக உறுதிப்படுத்தியது.

மார்ச் 26 அன்று பிரதமர் அன்வார் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையே நடைபெற்ற உயர்மட்ட தூதாண்மை ஈடுபாட்டைத் தொடர்ந்து, ஏழு மலேசியக் கப்பல்களும் தங்கள் பயணத்தைத் தொடர அனுமதி கிடைத்தது.

உலகின் 20 விழுக்காடு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் இந்த முக்கிய நீர்வழிப்பாதையில், பிப்ரவரி 28 முதல் ஈரான் பிரதேசங்கள் மற்றும் வசதிகள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.