ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் - டோனல்ட் டிரம்ப்

8 ஏப்ரல் 2026, 2:39 AM
ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் -  டோனல்ட் டிரம்ப்

வாஷிங்டன், ஏப்ரல் 8: ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இன்று காலை X தளத்தில் வெள்ளை மாளிகை வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகவும், முழுமையாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இராணுவ நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த ஒத்திவைப்பு ஒரு இருதரப்பு போர் நிறுத்தமாக இருக்கும் என்றும், இது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

"ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைக்க நான் ஒப்புக்கொண்டேன். இது ஒரு இருதரப்பு போர் நிறுத்தமாகும். எங்களது அனைத்து இராணுவ நோக்கங்களையும் நாங்கள் ஏற்கனவே அடைந்துவிட்டதாலும், அதைத் தாண்டிவிட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."

"ஈரானுடன் நீண்டகால அமைதி மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான ஒரு இறுதி உடன்படிக்கையை எட்டுவதற்கு மிக நெருக்கமான நிலையில் இப்போது இருக்கிறோம்," என்று அவர் கூறியதாகப்
பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையக்கூடிய 10 அம்சங்கள் அடங்கிய ஒரு திட்டத்தை ஈரானிடமிருந்து தனது தரப்பு பெற்றுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

"முன்னர் சர்ச்சைக்குரியதாக இருந்த ஏறக்குறைய அனைத்து விஷயங்களிலும் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆயினும், இந்த இரண்டு வார காலம், ஒப்பந்தத்தை இறுதி செய்து கையெழுத்திட அனுமதிக்கும்."

ஐந்து வாரங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்படிக்கையை தெஹ்ரான் எட்டத் தவறினால், ஈரானில் உள்ள பொதுமக்களுக்கான மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீதான
தாக்குதலுக்கு உத்தரவிடுவதாக டிரம்ப் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.