குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலையில் எரிபொருள் வாங்குவது சட்டவிரோதமானது

6 ஏப்ரல் 2026, 9:28 AM
குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலையில் எரிபொருள் வாங்குவது சட்டவிரோதமானது

ஷா ஆலம், ஏப்ரல் 6 – மானிய விலையிலான எரிபொருளைப் பெறுவதற்காகக் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மற்றவர்களின் அடையாள அட்டையைப் (MyKad) பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனத் தேசியப் பதிவுத் துறை (JPN) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்துத் தேசியப் பதிவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ பட்ருல் ஹிஷாம் அலியாஸ் கூறுகையில், அடையாள அட்டை என்பது ஒரு தனிநபரின் அதிகாரப்பூர்வமான ஆவணம் என்றும், அதை மற்றவர்கள் வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ சட்டத்தில் இடமில்லை என்றும் குறிப்பிட்டார்.

1990-ஆம் ஆண்டு தேசியப் பதிவு விதிமுறைகளின் கீழ், விதி 25-ன்படி மற்றவர்களின் அடையாள அட்டையைப் பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.

"இதன் காரணமாக, எரிபொருள் கொள்முதல் உட்பட அனைத்து கவுண்டர் பரிவர்த்தனைகளும் அந்தந்த அடையாள அட்டையின் உரிமையாளரால் மட்டுமே நேரடியாகச் செய்யப்பட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களின் அடையாள அட்டையை மற்றவர்களிடம் கடனாகவோ அல்லது தற்காலிகமாகவோ ஒப்படைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சமீபத்தில் தும்பாட்டில் உள்ள எரிபொருள் நிலையத்தில், நான்கு வெவ்வேறு நபர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி 100 லிட்டருக்கும் அதிகமான RON95 பெட்ரோலை வாங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மானிய விலை எரிபொருளைப் பெறுவதற்கு முறைகேடாக மற்றவர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தும் மற்ற நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்படும் எனத் தேசியப் பதிவுத் துறை அறிவித்துள்ளது.

இருப்பினும், BUDI95 திட்டத்தின் கீழ் ஒரே வாகனத்தைப் பயன்படுத்தும் தம்பதியினர், அவரவர் சொந்த அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி அதே வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்படுகிறது.

ஆனால், அத்தகைய சூழலிலும் அந்த அடையாள அட்டையில் புகைப்படம் மற்றும் பெயர் இடம்பெற்றுள்ள நபர் நேரில் இருப்பது அவசியம் என்றும், மோசடிகளைத் தவிர்க்க இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.