குப்பைகள் அகற்றும் பணிகள் தடையின்றி சீராக நடைபெறுவதை உறுதி செய்ய கழிவு மேலாண்மை நிறுவனத்திற்குக் கூடுதல் நிதி தேவை

6 ஏப்ரல் 2026, 4:52 AM
குப்பைகள் அகற்றும் பணிகள் தடையின்றி சீராக நடைபெறுவதை உறுதி செய்ய கழிவு மேலாண்மை நிறுவனத்திற்குக் கூடுதல் நிதி தேவை

ஷா ஆலம், ஏப்ரல் 6: உலகளாவிய டீசல் விலை உயர்வால், குப்பைகள் அகற்றும் பணிகள் தடையின்றி சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, கழிவு மேலாண்மை நிறுவனத்திற்குக் (KDEBWM) கூடுதல் நிதி தேவைப்படுகிறது

இது குறித்து மாநில அரசாங்கத்திடம் தாம் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளதாகவும், அந்தப் பொதுப் பயன்பாட்டு நிறுவனம் எதிர்கொள்ளவிருக்கும் நிலைமை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த ஒரு கண்ணோட்டத்தையும் வழங்கியுள்ளதாக உள்ளாட்சி ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் கூறினார்.

"குறுகிய காலத்திற்கு அவர்களால் சமாளிக்க முடியலாம், ஆனால் மத்திய கிழக்கில் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதை எங்களால் கணிக்க முடியவில்லை. இந்த கூடுதல் நிதி இல்லையென்றால், குப்பை சேகரிப்பு அட்டவணையில் பாதிப்பு ஏற்படும்," என்றார்.

"குத்தகையாளர்கள் நிச்சயமாகப் பாதிக்கப்படுவார்கள், அதனால் அவர்கள் சேகரிப்பு பயணங்களைக் குறைப்பார்கள். இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். துப்புரவுத் துறை மாநிலத்திற்குத் தேவையான ஒரு முக்கியமான பிரிவு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

வெள்ளிக்கிழமை, KDEBWM நிர்வாக இயக்குநர் டத்தோ ராம்லி முகமட் தாஹிர், தற்போதைய உலகளாவிய பதட்டங்கள் காரணமாக, கழிவுகளை அகற்றும் பணிகளுக்காக ஒவ்வொரு மாதமும் 4 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான டீசல் விலை உயர்வை தனது நிறுவனம் தாங்க வேண்டியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

60 விழுக்காட்டிற்கும் அதிகமான இந்த உயர்வால், மாதாந்திர இயக்கச் செலவுகள் முன்பு சுமார் 6 மில்லியன் வெள்ளியாக இருந்தது, இப்போது கிட்டத்தட்ட 10 மில்லியன் வெள்ளியாக அதிகரித்துள்ளது. இது கழிவு மேலாண்மை அமைப்பின் செயல்திறன் மற்றும் சேவைகளின் தொடர்ச்சிக்கு சவால்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கும், பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்கும் சிறந்த தீர்வுகளைக் காண, சில வெளிநாட்டு நிபுணர்களின் ஈடுபாட்டுடன் மாநில அரசாங்கத்தால் தணிப்பு
நடவடிக்கைகள் வகுக்கப்பட்டு வருவதாக ராம்லி தெரிவித்தார்.

நீண்ட கால நடவடிக்கையாக, மின்சார லாரிகளைப் (EV) பயன்படுத்தும் திட்டத்திற்கு KDEBWM தயாராக உள்ளது, ஆனால் அவற்றின் திறன், மின்கலத்தின் ஆயுள், முதலீட்டுச் செலவு மற்றும் பொருத்தம் ஆகியவை கவனமாக ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.