ஷா ஆலாம், ஏப்ரல் 4: மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டமான சூழலைத் தொடர்ந்து, செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக சிலாங்கூர் அரசாங்கம் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்களின் அவசியத்தை மறுபரிசீலனை செய்கிறது.
இந்த நடவடிக்கை, மாநில நிதி ஒதுக்கீடுகள் மக்களுக்கு நேரடிப் பலனளிக்கும் வகையில் கவனம் சிதறாமல் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ளது என்று இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில் முனைவோர் ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
"மாநிலம் 'காத்திருந்து பார்க்கும்' அணுகு முறையைக் கையாளவில்லை. மாறாக, அதிக முக்கியத்துவம் இல்லாத திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மறுமதிப்பீடு செய்வது உட்பட செலவினக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்."
"அதில், மாநிலத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதிகாரப் பூர்வ அழைப்புகளின் அவசியமும் மறுஆய்வு செய்யப்படும்," என்று அவர் கூறினார்.
ஷா ஆலாம், பிரிவு 7, ராஜா மூடா மூசா மண்டபத்தில் இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு மற்றும் கோத்தா அங்கேரிக் சட்டமன்ற உறுப்பினரின் ஈகைத் திருநாள் உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நஜ்வான் இவ்வாறு கூறினார்.
மாநிலத்தின் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், நேற்று மந்திரி புசார் தலைமையில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில பொருளாதார நடவடிக்கைக் கூட்டத்தில் (MTES) இவ்விஷயம் விவாதிக்கப் பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ளும்போது, மாநிலத்தின் நிதி நிர்வாகம் விவேகமாக இருப்பதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை முக்கியமானது என்று அவர் கூறினார்.
"தேவையற்ற செலவுகளைக் குறைத்து, உண்மையான அத்தியாவசிய விஷயங்களில் கவனம் செலுத்த நாங்கள் விரும்புகிறோம்."
"அதே வேளையில், தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப் படக்கூடிய மக்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளையும் மாநில அரசு ஆராய்ந்து வருகிறது," என்றார் அவர்.
மேற்கு ஆசிய மோதல்களால் ஏற்படக்கூடிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு போன்ற அழுத்தங்களைச் சமாளிக்க, புதிய முயற்சிகள் உட்பட பல உத்திகளை சிலாங்கூர் உருவாக்கி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தின் சிறப்பு வட்டமேசை விவாதத்தில் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் வல்லுநர்களின் கருத்துக்கள் மற்றும் கணிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கைகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அறிவிக்கப்படும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை எதிர்கொள்ள சிலாங்கூர் முழுமையாகத் தயாராவதற்கு பல்வேறு கருத்துகளும் கணிப்புகளும் முன்வைக்கப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிலாங்கூர் சிக்கன நடவடிக்கையாகத் தலைவர்களின் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதிகாரப் பூர்வ அழைப்புகள் மீது மறுஆய்வு
4 ஏப்ரல் 2026, 12:16 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
கேரி தீவு - துறைமுக மேம்பாட்டிற்கு அமைச்சரவை ஒப்புதலை சிலாங்கூர் மாநிலம் வரவேற்கிறது
Pakiya
14 மார்ச் 2026

selangor
‘சிலாங்கூர் மேம்பாட்டுத் தொகுப்பு’ திட்டங்கள் ஜூன் முதல் அமல் - அமிருடின் ஷாரி
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
24 மே 2026

selangor
ஒப்புக்கல்ல, ருக்குன் நெகாராவை ஆழமாக உணர்ந்து பின்பற்ற வேண்டும்: மந்திரி புசார் வலியுறுத்தல்
Pakiya
21 மே 2026

selangor
வசதிக்கேற்ப அரசியல் லாபத்திற்கு விசுவாசத்தைக் காட்டுவதை நிறுத்துங்கள்: மந்திரி புசார் திட்டவட்டம்
Pakiya
21 மே 2026

உங்கள் கருத்து என்ன?




