ஊடகத் துறையில் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான கொள்கை ஆய்வு; பணியாளர் நலனுக்கு முக்கியத்துவம்

3 ஏப்ரல் 2026, 9:21 AM
ஊடகத் துறையில் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான கொள்கை ஆய்வு; பணியாளர் நலனுக்கு முக்கியத்துவம்

கோலாலம்பூர், ஏப்ரல் 3 : ஊடகத் துறைக்கான வீட்டில் இருந்து வேலை (BDR) செய்யும் கொள்கையைச் செயல்படுத்துவது குறித்து உள்ளூர் ஊடக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் கலந்துரையாடி கருத்துக்களைப் பெறுமாறு மலேசிய ஊடக மன்றத்தை (MMM) தொடர்பு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

BDR அமலாக்கம் தொடர்பான ஒவ்வொரு முடிவிலும், நாட்டின் ஊடகத் துறையில் உள்ள பணியாளர்களின் நலன் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதே அமைச்சின் முக்கிய நோக்கம் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

“பொதுமக்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவது உட்பட, இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு தகவல் திணைக்களத்திடமும் நான் கேட்டுக் கொள்வேன். அதிலிருந்து பெறப்படும் முடிவுகள்,
பொதுச் சேவை தலைமை இயக்குநரிடம் (KPPA) சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சரவைக்கும், அமைச்சுக்கும் தெரிவிக்கப்படும்,” என்றார்.

மோசடிகளைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் அமலாக்க ஒத்துழைப்பை அதிகரிக்க மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) மற்றும் மலேசிய பத்திரங்கள் ஆணையம் (SC) ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற விழாவிற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் ஃபஹ்மி இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில், நிதித் துணை அமைச்சர் லியூ சின் டோங், MCMC தலைவர் டான்ஸ்ரீ முகமது சலீம் ஃபதே தின் மற்றும் SC தலைவர் டத்தோ முகமது ஃபைஸ் அஸ்மி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரு செயல்திட்டமாக, பொதுத்துறை மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனங்களுக்கு (GLC) வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கை ஏப்ரல் 15 முதல் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தார்.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள
மோதலால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் எரிசக்தி விநியோகத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.

கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் பணியாற்றும் கூட்டரசுப் பொதுச் சேவை அதிகாரிகள், அலுவலகத்திற்கு ஒருவழிப் பயண தூரம் எட்டு கிலோமீட்டருக்கு மேல் இருந்தால், BDR கொள்கையைச் செயல்படுத்த தகுதியுடையவர்கள் என்று பொதுச் சேவைத் துறை நேற்று அறிவித்தது.

இவ்வார விடுமுறை நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் மாநிலங்களுக்கு, செவ்வாய் முதல் வியாழன் வரை முழு நாள் BDR செயல்படுத்தப்படும் என்றும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இது அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வார விடுமுறை நாள் வெள்ளிக்கிழமைகளில் வரும் மாநிலங்களுக்கு, திங்கள் முதல் புதன் வரை BDR செயல்படுத்தப்படும் என்றும், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் இது அனுமதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.