கோலாலம்பூர், ஜூன் 16- கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டான் ஸ்ரீ நளினி பத்மநாதன், மலேசிய ஊடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மே 26 ஆம் தேதி நடைபெற்ற மலேசிய ஊடக மன்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில், நளினியின் நியமனம் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டதாக மன்றம் தெரிவித்தது.
18 ஆண்டுகள் நீதித்துறையில் பணியாற்றிய நளினி, கடந்த பிப்ரவரி மாதம் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது, டான் ஸ்ரீ நளினி பத்மநாதன் அனைத்துலக வழக்கறிஞர் சங்க நீதிபதிகள் மன்றத்தின் துணைத் தலைவராகவும், வர்த்தக நீதிமன்றங்களுக்கான அனைத்துலக நிலைமன்றத்தின் வழிகாட்டல் குழு உறுப்பினராகவும், கத்தார் அனைத்துலக நீதிமன்றம் மற்றும் தகராறு தீர்வு மையத்தில் நீதிபதியாகவும் பணியாற்றி வருகிறார்.
2025ஆம் ஆண்டு மலேசிய ஊடக மன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட MMC, ஊடக நெறிமுறைகளை மேம்படுத்துதல், பொதுமக்கள் புகார் முறைகளைக் கையாளுதல், ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஆகிய பொறுப்புகளை கவனிக்கின்றது.
பொருளாதார அழுத்தம், தொழில்நுட்ப மாற்றம், செயற்கை நுண்ணறிவு (AI), தவறான தகவல் பரவல் மற்றும் ஊடகங்களின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் சவாலான காலகட்டத்தில், டான் ஸ்ரீ நளினியின் நியமனம் அமைந்திருக்கின்றது.
அவரது தலைமைத்துவ திறன்கள், நாட்டில் ஊடக ஒழுக்கநெறிகளை வலுப்படுத்த உதவுமென தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் நம்பிக்கை தெரிவித்தார்.







