பந்திங்கில் வழிப்பறி கொள்ளையில் ஒருவர், வாகனம், பணம், உடமைகளையும்  இழந்தார்   

11 மார்ச் 2026, 3:22 AM
பந்திங்கில் வழிப்பறி கொள்ளையில் ஒருவர், வாகனம், பணம், உடமைகளையும்  இழந்தார்   

ஷ ஆலாம், மார்ச் 11 – பந்திங், புக்கிட் பெராவில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில், வழி தவறியது போல் நடித்து ஒப்பந்தக்காரர் ஒருவரைக் கட்டிப்போட்டு, அவரது வாகனத்தையும் உடமைகளையும் இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நேற்று நிகழ்ந்த இச்சம்பவத்தில், 50 வயது மதிக்கத்தக்க அந்த ஒப்பந்தக்காரரை இருவர் நடந்தே வந்து அணுகி, வழி கேட்பது போல் பாசாங்கு செய்ததாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் அக்மல்ரிசால் ராட்சி தெரிவித்தார்.

சிறிது நேரம் உரையாடிய பிறகு, சந்தேக நபர்களில் ஒருவன் திடீரென ஒரு வெட்டுக் கத்தியை எடுத்து மிரட்டி, பாதிக்கப்பட்டவரின் கை, கால்களைக் கட்டினான்.

“சந்தேக நபர்கள் பாதிக்கப் பட்டவரின் முகத்தில் உதைத்ததில் அவரது உதடு கிழிந்தது. பின்னர், அவருக்குச் சொந்தமான டொயோத்தா   ஹை லக்ஸ் ரக வாகனம், கைப் பேசி, முக்கிய ஆவணங்கள் மற்றும் 9,500 ரிங்கிட் ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்,” என்று அவர் கூறினார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் காலை 10.15 மணியளவில் போலீசில் புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில், சுமார் ஒரு மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட வாகனம் பூச்சோங், ஜாலான் பிரிமாவின் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது.

சந்தேக நபர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தண்டனைச் சட்டம் பிரிவு 395/397-இன் கீழ் இவ் வழக்கு விசாரிக்கப் பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.