ஷா ஆலம், மார்ச் 30: மார்ச் 13 முதல் நேற்று வரை நடைபெற்ற ஓப்ஸ் ஹரி ராயா ஐடில்ஃ பித்ரி (HRA) 2026 நடவடிக்கையின் போது, சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) 45,140 வாகனங்களைச் சோதனையிட்டதில் 6,688 நோட்டீஸ்களை வழங்கியது.
இந்தக் காலகட்டத்தில், சாலைப் போக்கு வரத்துச் சட்டம் 1987-இன் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 1,789 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது. சிலாங்கூர் ஜேபிஜே இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் கூறுகையில், முக்கிய நெடுஞ்சாலைகள், பேருந்து பணிமனைகள், பொது முனையங்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகள் உட் பட முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.
அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 334 பேர் பணியில் ஈடுபடுத்தப் பட்டதாகக் கூறினார். "காலாவதியான மோட்டார் வாகன உரிமம் (1,058 வழக்குகள்), செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமை (942), காப்புறுதி இல்லாமை (728), தொழில் நுட்பக் கோளாறுகள் (919) மற்றும் அதிக சுமை (45 வழக்குகள்) ஆகியவை முக்கிய குற்றங்களில் அடங்கும்," என்று அவர் கூறினார்.
மேலும், சரக்கு வாகனங்கள் செயல் பாட்டுத் தடைகளுக்கு இணங்கும் அளவு அதிகரித்துள்ளது என்றும், நான்கு நாட்கள் அமலாக்கத்தின் போது ஒன்பது லாரிகள் மட்டுமே விதிமுறைகளை மீறியது கண்டறியப் பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாலைகளில் காணப்படும் பெரும்பாலான லாரிகள், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வது மற்றும் துறைமுகங்களுக்கு கொள்கலன்களை எடுத்துச் செல்வது போன்ற அனுமதிக்கப்பட்ட வகைகளில் இருந்தன. அதே வேளையில், சுமை இல்லாத லாரிகள் காலை 8 மணி முதல் இரவு 8.00 வரை பயணிக்க அனுமதிக்கப் படுகின்றன.
சாலைப் போக்குவரத்துச் சட்டங்களுக்கு இணங்குவதை அதிகரிக்கவும், விபத்து அபாயங்களைக் குறைக்கவும் ஜேபிஜே தொடர்ந்து அமலாக்கத்தை வலுப்படுத்தும் என்று அஸ்ரின் கூறினார்.
வாகனங்கள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதிசெய்து, கவனமாக ஓட்டுமாறும், MyJPJ செயலி அல்லது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் புகார்களைத் தெரிவிக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.







