ஷா ஆலம், மார்ச் 29 - சிலாங்கூர் மாநிலத்தின் ஐந்து முக்கிய மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிலாங்கூரில் உள்ள சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், கிள்ளான், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மட்டுமல்லாது, பேராக், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் இதே வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக, ஒரு மணிநேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் போதோ அல்லது கனமழை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் அறிகுறி தென்படும் போதோ இத்தகைய இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்த எச்சரிக்கையானது அதிகபட்சமாக ஆறு மணிநேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, பொதுமக்கள் வானிலை மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
துல்லியமான மற்றும் உடனுக்குடனான தகவல்களைப் பெற மெட்மலேசியாவ்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.met.gov.my என்ற முகவரியையோ அல்லது அதன் சமூக ஊடகப் பக்கங்களையோ நாடலாம். மேலும், 'myCuaca' செயலியைப் பதிவிறக்கம் செய்து வானிலை தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.








