கோலாலம்பூர், மார்ச் 28: கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் (கேஎல்சிசி) அமைந்துள்ள ஜாலான் அம்பாங்கில், உரிமம் பெறாத புகைப் படக்காரர்களின் ('உலாட் போட்டோ') நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில், அப்பகுதியில் விரைவில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்படவுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இப்பகுதியில் சிசிடிவி-க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கேஎல்சிசி சொத்து ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மற்றும் கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) ஆகியவை இணைந்து செயல் படும் என்று கூட்டரசுப் பிரதேசங்களுக்கான அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.
"சிசிடிவி-க்கள் கேஎல்சிசி நிர்வாகத்தின் கீழ் உள்ளன. அனுமதி இல்லாமல் இதுபோன்ற வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் முகங்களை அடையாளம் காண, வெளிப் புறங்களில் எவ்வாறு கூடுதல் சிசிடிவி-க்களைப் பொருத்தலாம் என்பது குறித்து நான் அவர்களுடன் கலந்துரையாடுவேன்," என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கேஎல்சிசி வளாகத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் உரிமம் பெறாத புகைப் படக்காரர்கள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட சண்டையைத் தடுக்க முயன்ற ஆடவர் ஒருவரை, 18 புகைப்படக்காரர்கள் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இப்பிரச்சினை தொடராமல் இருக்க, போலீஸ் மற்றும் டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகள் அப்பகுதியில் அடிக்கடி ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஹன்னா இயோ கேட்டுக்கொண்டார்.
"சுற்றுலாப் பயணிகளும் மலேசியர்களும் துன்புறுத்தப்படுவதை நாங்கள் விரும்ப வில்லை. ஏனெனில் இது நாட்டின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சண்டைகள் நடந்திருக்கக் கூடாது. இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் போலீசாரைக் கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
நேற்றைய தினம், 17 முதல் 45 வயதுக்குட்பட்ட உரிமம் பெறாத 18 புகைப்படக்காரர்கள் கேஎல்சிசி வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டு, தண்டனைச் சட்டம் பிரிவு 148-இன் கீழ் மேலதிக விசாரணைக்காக விசாரிக்கப்பட்டு வருவதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சசாலி ஆடம் தெரிவித்திருந்தார்.
இதேவேளையில், வங்சா மாஜுவில் உள்ள ஒரு மசாஜ் மையத்திடம் பணம் கேட்டதாகக் கூறப்படும் கூட்டரசுப் பிரதேச மக்கள் பிரதிநிதித்துவ மன்ற (MPPWP) உறுப்பினர்கள் தொடர்பான விவகாரம் குறித்து டிபிகேஎல் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் ஹன்னா இயோ தெரிவித்தார்.
"MPPWP உறுப்பினர்கள் களத்திற்குச் செல்ல எந்தக் காரணமும் இல்லை, ஏனெனில் அது டிபிகேஎல்லின் அதிகார வரம்பிற்குட்பட்டது. புகார்களைக் கேட்டு அவற்றை டிபிகேஎல்லிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே MPPWP-யின் பங்கு; அவர்கள் அமலாக்க அதிகாரிகள் அல்ல. இது மிகவும் தெளிவான ஒன்று," என்று செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
அண்மையில், ஒரு மசாஜ் மையத்தின் சிசிடிவி காணொளி ஒன்று வைரலானது. அதில், தங்களை MPPWP உறுப்பினர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர், அப்பகுதியில் இருந்து புகார்கள் வந்திருப்பதாகவும், அந்த மையத்தை மூடுவதைத் தவிர்க்க பணம் கேட்டதாகவும் பதிவாகியிருந்தது.
கேஎல்சிசி-யில் 'உலாட் போட்டோ' தொல்லைக்கு முற்றுப்புள்ளி: கூடுதல் சிசிடிவிக்கள் பொருத்தப்படும்
28 மார்ச் 2026, 1:12 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
சுக்மா 2026: கோலாலம்பூரை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சிலாங்கூர் காற்பந்து அணி
Najamuddin Mohd Nor
15 ஆகஸ்ட் 2026

national
புத்ராஜெயாவிலும் கோலாலம்பூரிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
Media Selangor Team
12 ஆகஸ்ட் 2026

national
கோலாலம்பூர் மருத்துவமனை கழிவறைகள் குறித்த வைரல் காணொளி உண்மையல்ல; நிர்வாகம் விளக்கம்
Shalini Rajamogun
1 ஆகஸ்ட் 2026

national
ஜாலான் துன் ரசாக்கில் கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
Shalini Rajamogun
19 ஜூலை 2026

வகைeconomy
உங்கள் கருத்து என்ன?



