ஷா ஆலம், மார்ச் 27: கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த மோதிவிட்டுத் தப்பிச் சென்ற விபத்தைத் தொடர்ந்து, ஒன்பது மாதங்களாக உயிருக்குப் போராடி வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் காலமானார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6.10 மணியளவில் பண்டார் ஸ்ரீ செண்டாயானில் உள்ள அவரது இல்லத்தில் கோமா நிலையில் இருந்து மீளாமலேயே கோப்ரல் முகமட் ஃபைருஸ் காமிஸ் (42) உயிரிழந்தார்.
ரஹாங் காவல் நிலையத்தில் பொதுப் பணிப் பிரிவில் பணியாற்றி வந்த அவர், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது மோதிவிட்டுத் தப்பிச் சென்ற வாகனத்தால் படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் மாதம், காலை மணி 7.55 அளவில், புக்கிட் நெனாஸ் சாலையில், செண்டாயானிலிருந்து சுங்கை ஊஜோங் நோக்கிச் சென்றபோது நிகழ்ந்தது.
முன்னாள் தேசியக் காவல்துறை தலைவர், டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில துணை காவல்துறை தலைவர், சீனியர் அசிஸ்டென்ட் கமிஷனர் முகமது நஷாருடின் முகமது ஷெரிப் ஆகியோர் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த வருகையின் போது, சமூக நல நிதியத்திலிருந்து RM1,000 மரண சகாய நிதிக்கான முன்பணத்தையும் முகமது நஷாருடின் வழங்கினார்.








